சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும் - பகுதி -4.

வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது என்பது சாத்தியமானாலும், அவ்வக்கிரமமும், ஆட்சியும், ஆதிக்கமும் இந்து மதம், கடவுள், சமயம், என்பவைகளான மூடக் கொள்கைகளின் பேரில்தான் கட்டப்பட்டு இருக்கின்றது என்பது நமது முடிவு.
இம்மூடக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, வெள்ளைக்காரர்களையும், பார்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்துவிட்டாலும், மறுபடியும் ''வெள்ளைக்காரர்களும்,'' ''பார்பனர்களும்'' வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திகொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக தெரிவித்துக் கொள்கிறோம்.
வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அந்நிய அரசாங்கமோ இல்லாமல், நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக, தற்குறிகளாக, தாசி மக்களாக, தீண்டத்தகாதவர்களாக இருந்து வந்திருக்கின்றோம் என்பதை தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம்.
நம்புவதற்கு ஏதாவது கஷ்டமிருந்தால், நம் நாட்டு நம் மக்களால் ''சாமூண்டீஸ்வரி'' பேராலும், ''பத்மநாபசாமி'' பேராலும், ''கிருஷ்ணசாமி'' பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம்.
ஆட்சி முறைக் கொடுமையும், பார்பன ஆதிக்கமும், வெள்ளைக்கார அந்நிய அரசாங்கத்தைவிட, உள்நாட்டு மக்களால் ஆளப்படும் சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா-? கொஞ்சமா-? என்பதை கவனித்தால், வெள்ளைக்காரரும், பார்ப்பனர்களும் தாங்களாகவே தங்கள் பலத்தால் அக்கிரமங்களை செய்கிறார்களா-? அல்லது இந்த மதமும் கடவுளும் மத நெறியும் இவ்வித அக்கிரமங்களை செய்ய இடம் கொடுக்கின்றதா என்பது சுலபத்தில் விளங்காமற் போகாது என்றே எண்ணுகின்றோம்.
எனவே, நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்ன வென்றால், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும், அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும்.
இம்மூன்றும் ஏற்படுமேயானால் மதமும், சாமியும், சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்தே தீரவேண்டும் என்று சொல்லி இதை முடிக்கின்றோம்.
************* முற்றும்.
1.07.1928 குடி அரசு.
தந்தை பெரியார் எழுதியது.
நன்றி;-
''பெரியார் களஞ்சியம்'' - பக்கம் 20,21.
பெரியார் களஞ்சியத்தை தொகுத்து
வெளியிட்டவர் கீ. வீரமணி