தனி வழி

கடைந்தெடுத்த எழுத்து
முடிவை உணர்த்திவிடும்
குடைந்து வெளியேறின பாம்பு
மூச்சை நிறுத்திவிடும்

கொப்பளிக்கும் வார்த்தைகள்
கோபுரமாய் இருக்கும்
ஆர்பரிக்கும் மனம்
அகிலத்தை அணைத்துவிடும்

நிழல்கூட பிரிந்தே செல்லும்
கலியுக காலம் இதுவென்று
நிஜம்கூட பொய்யாகும்
நிலையற்ற மனிதர்களினால்

சுதந்திரம் ஒன்றே கையில் கொண்டு
சுற்றியிருப்போரை சுரண்டுவது
உதாரித்தனமான உலகில்
ஓய்வெடுப்பதை ஒத்தது

ஈர்க்கும் வழிகள் ஆயிரம் உண்டு
காக்கும் கரங்கள் பல்லாயிரம் இங்கு
போகும் பாதை கோடியாகும்
புகலிடம் ஒன்றே முடிவாகும்

போதையில் உளறல் உண்மையாகும் சோதனையில் சொருகல் சூட்சமமாகும்
வேதனையில் விவேகம் வெற்றியாகும்
போதனையில் உருக்கம் உணர்வாகும்

கோடியிருக்கும் மனிதனுக்கும்
தெருகோடியிலிருக்கும் மனிதனுக்கும்
ஆறடி நிலமே அளவாகும்
அதுவும் அவசர உலகில் கானலாகும்

எழுதியவர் : bhanukl (28-Jun-13, 8:06 pm)
பார்வை : 201

மேலே