ஞாயித்துக் கிழமை.....
எப்போது நினைத்தாலும் மனதிற்கு "அப்பாடா" என்கிற ஒரு நிம்மதியை கொடுக்க கூடிய ஒரே நாள் இந்த நாள் தான். பள்ளிக்கு போகும் பருவத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு, காய்ச்சலோ, தலைவலியோ, வாந்தியோ வந்ததில்லை என்பதற்கு காரணம் அந்த நாளை நான் அந்த அளவிற்கு நேசித்தேன் என்பதே.
ஞாயிற்று கிழமைக்கு நான் மரியாதை கொடுக்க ஆரம்பித்ததெல்லாம் பள்ளி கூடத்துக்கு போக ஆரம்பித்ததற்கு அப்புறம் தான். சனி, ஞாயிரு விடுமுறை தான் என்றாலும். ஞாயிற்றுக் கிழமைக்கு தான் எப்போதுமே மவுசு அதிகம். ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்கும் அப்படியொரு பந்தம் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்பெசல் கிளாஸ் வைத்து என் சாபங்களை வாங்கி கட்டிக் கொண்ட அந்த கணிதம் ஆசிரியை கமலாவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
விடுமுறை தினம் என்பதை எல்லாம் தாண்டி, சர்ச்சுக்கு போறது, குடும்பத்தோடு படத்துக்கு போறது, வாரம் ஒரு பந்து வாங்குறது, சிக்கன், மீன் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, டிவியில படம் பாக்குறது, கிரிக்கெட் வெளாடுறது, சொந்தகாரவங்க வீட்டுக்கு போறது, சரக்கடிக்க பழகியது, ஆளப் பார்க்க போறது. இப்படி பல சந்தோசங்களை பத்திரமாய் வாங்கி வைத்திருப்பது இந்த ஞாயிற்றுக் கிழமை தான்.
எங்காவது போகணும் என பிளான் பண்ணினாலே நாங்கள் போக முடிவெடுப்பது ஞாயிற்றுக் கிழமையில் தான். எங்கயுமே போக கூடாது வீட்டிலேயே இருக்க வேண்டுமென முடிவெடுப்பதும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் தான். "டேய் எந்திரி டா, கோயிலுக்கு போகணும்" என்று சொல்லி என்னை வீட்டில் இருப்பவர்கள் டார்ச்சர் செய்ததும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் தான். கோவிலுக்கு போக மறுத்து போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் போதெல்லாம் "இவன் சாத்தான், அதான் உருப்புடாம சுத்திக்கிட்டு இருக்கான்" என்பார் அப்பா. ஒரு சில ஞாயிற்றுக் கிழமைகளில் கடவுளை வெறுக்க வைத்த புண்ணியமும் இந்த நாளையே சேரும்.
வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வந்த பிறகு எந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையும், எனக்கு ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததே இல்லை, பெரும் பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் என்னை கஷ்டப் படுத்தியது கறி சோறு தான்.
இறந்த காலத்தில் இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளை நினைத்து இருக்கிற ஞாயிற்றுக் கிழமைகளை சபித்துக் கொண்ட நாளும் இருக்கிறது. என்ன இன்னக்கி ஞாயிற்றுக் கிழமை மாதிரியே இல்லையே என நினைக்கும் போது, சட்டென நினைவுக்கு வந்து விடும் வீட்டில் இருக்கிற போது வந்து போன ஞாயிற்றுக் கிழமைகள். வீட்டை விட்டு வெளியூரில் இருக்கிற நண்பர்களுக்கு தெரியும் ஞாயிற்றுக் கிழமை எதெல்லாம் நம்மிடம் இருந்து பறித்திருக்கிறது என்று.....
இஷ்டம் போல் வாழ்ந்த காலங்கள் எல்லாமே இந்த நாளில் தான் இருக்கிறது. வாரத்தின் முதல் நாளாகவும் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அப்பா போன் பண்ணுவார், "கோயிலுக்கு போகலயாட"னு, எனக்கும் அப்பாவிற்கும் சேர்த்தே வந்து போன ஞாயிற்றுக் கிழமைகள் இப்போதெல்லாம் அவருக்கு மட்டுமே வந்து போகின்றன......
இன்னைக்கு ஞாயித்துக் கிழமை......