வாலி
இவன்
ஓவியத்தை காதலித்தான்
கவிதையை கரம் பிடித்தான்.
ஓவியத்தில் வரைய முடியாததை
கவிதையாக்கினான்
கவிதையில் சொல்ல முடியாததை
ஓவியமாக்கினான்.
இவன்
பேனா முனை
கவிதைச்சுனை.
இவனுக்கு
தூரிகையும் எழுத்தாணியும் -
காரிகையும் கழுத்தணியும் போல
வாளி வாளியாய்
அள்ளினாலும்
வற்றாது
வாலியின் ஊற்று.
அரிதாரம் பூசாத
அவதார புருசன்.
மயக்கமா... கலக்கமா...
பாடல் மூலம்
மயக்கத்தை விலக்கியவன்.
வாய்ப்பு தேடி
வலிந்து சென்றானே அன்றி
வழிந்து செல்லவில்லை.
வாலியின் படைப்புகள்
ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும்.
மக்கள் தலைவரை கூட
தம்
புரட்சி கருத்துக்களால்
புரட்சி தலைவராக்கினான்.
உன் புகழை
வான் ஒலிக்கும் !
பாடல்களை தினமும்
வானொலி ஒலிக்கும்.
வாலி
காலமானார்
இல்லை - தமிழர்களின்
காலம் ஆனார்.
(ஐயா அவர்களை ஒருமையில் அழைத்தமைக்கு மன்னிக்கவும்)

