நீதி பேசியது நிர்பயாவிடம் ...

( டெல்லி மாணவி பலாத்கார வழக்கில்
4 பேருக்கும் தூக்கு தண்டனை - செய்தி ​)


​இருண்ட வானம் இன்று இடியுடன் பெய்தது
இயற்கை அழுதது நிர்பயாவை நினைத்து !
இந்தியா கலங்கியது அவளின் நிலைகண்டு
இதயங்கள் குளிர்ந்தது இன்றைய தீர்ப்பால் !

தலைநகர் டில்லியில் நடந்திட்ட கொடுமை
தலைகுனிய வைத்தது உலக அரங்கில் !
நிமிர்ந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால்
நீதியும் பேசியது நிர்பயாவின் வழக்கில் !

குறுகிய காலத்தில் நியாயம் பிறந்தது
அழுதிட்ட விழிகள் அகன்று விரிந்தது !
நீதியும் சிலநேரம் கடமையை செய்கிறது
நீதிக்கு தலைவணங்கிய நீதிமான் வாழ்க !

இதுபோன்ற தீர்ப்பும் இனியும் வந்திடுக
இழைக்கும் குற்றங்கள் குறைந்திட !
முறையீடு செய்தாலும் நிறுத்தாமல்
முறையான தீர்ப்பை நிறைவேற்றுக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Sep-13, 3:48 pm)
பார்வை : 86

மேலே