மனிதமா மதமா

மனிதமா? மதமா?
மரத்தோடு மரம்உரசினால்,
மரத்திற்குக் காயம்---
மதத்தோடு மதம்உரசினால்,
மனிதனுக்குக் காயம்---
மனிதா-! உனக்குஎம் மதமும்
பிடிக்கலாம்---ஆனால்
மதம்மட்டும் உன்னை என்றும்
பிடித்துவிடக் கூடாது---
மனிதத்தை மனிதனிடம்
மலரச் செய்ய மதமா?
மனிதத்தை மனிதனிடம்
உலரச் செய்ய மதமா?
மனித நேயத்தை---மனத்தில்
விதைக்க மதமா?
மனித நேயத்தை---மண்ணில்
புதைக்க மதமா?
மனிதனுக்காக மதமா?
மதத்திற்காக மதமா?
மனஅமைதி நிறைக்க மதமா? .
மயான அமைதிக்கு மதமா?
இதம்சேர்க்க மதமா?
மனிதனைப் பதம்பார்க்க
மதமா? விதவிதமாய்
வதம்செய்வதற்கு மதமா?
வதம்செய்து வாட்டுவதில்
சதம்எடுக்கத் துடிப்பது மதமா?
மனங்கள் குவியத் தானே
மாசற்ற கோவில்கள்?---அங்குப்
பிணங்கள் குவிக்கவா
பிறந்தன மதங்கள்?
பாதையினைக் காட்டாமல்
போதை ஊட்டுவது மதமா?
நெறியினைக் காட்டாமல்
வெறியினை ஊட்டுவது மதமா?
"கொல்"என்று எந்தமதம்
சொல்லுகிறது?--
"கொல்" என்று சென்றால்
"நில்"என்று தானே
சொல்லுகிறது எம்மதமும்?
இந்தமதம் அந்தமதம் என்று
எந்தமத மாயினும்--அதைச்
சொந்தமதம் என்றே
வந்தித்து வழிபட்டால்,
இந்தியத் திருநாட்டில்
எந்தத் துன்பம் எங்கு
வந்து தலைகாட்டும்?
"தம்மதமே சம்மதம்"
என்பது ஆயுதம்---
எம்மதமும் சம்மதம்"
என்பது ஆன்மீகம்---
ஆயுதம் தொலையட்டும்---
ஆன்மீகம் விளையட்டும்---
மதமே--!நீ
மனிதத்தின் ஊற்று---
மதமே--!நீஅந்த
மனிதத்தை
மனிதன்மேல் ஊற்று....
நல்ல வேளை--எந்த
உயிர்களிடத்தும்
உலகினில் எங்கும்
மதங்கள் இல்லை--
கொடிய கொசுக்களை ஒழிக்கக்
கோடிகள் தேவை யில்லை...
மதங்களைக் கற்பித்து---அவற்றை
மனிதர்கள் ஆக்குங்கள் போதும்---
ஒன்றாத அவைஎல்லாம்
ஒன்றோடு ஒன்றுமோதி
ஒன்றை ஒன்று தின்று
ஒன்றை ஒன்று கொன்று
ஒன்றும் மீதி இன்றியே
ஒழிந்து போதல் உறுதி---
கொசுக்களின் தொல்லை
பெருந்தொல்லை--அவற்றை
ஒழிக்கச் சிறந்தவழி
இதைவிட வேறில்லை
மதத்தை மதம்மதிக்கிறது---
மதம்ஏறிய மனம்தான்
மதத்தை மிதிக்கிறது...
மனத்தை மிதிக்கிறது....
அடுத்தவர் மதத்தை
"அழித்துவிடு" என்று
எடுத்தோதும் மதமும்
எங்கேனும் உண்டோ?
மதிப்பிற்கு உரிய
மதமே---! உனைநான்
மன்றாடி வேண்டுகிறேன்---
மனம்இரங்கு--நீயும்
புண்ணாகும்---இந்த
மண்ணைப் பொன்னாக்கு---
மனிதா--! மனிதா--!
இனியாவது--நீ
மனம்திறந்துபார்---
மனிதமா-? மதமா-?