தாய்மை
அம்மா ! உன் பெருமை
நான் அறிய உதவியது
இந்த மகப்பேறு !
குழந்தை முகம் பார்த்த பின்
பிரசவ வலி எல்லாம்
மறந்துவிடும் என்கிறார்கள் !
ஆனால்...
குழந்தை வளர்த்துப் பார்த்த பின்தான்
உன் வலி புரிந்ததம்மா !
என் குழந்தை
ஒவ்வொரு நொடியும் ,
உன்னைத்தான்
நினைவுபடுத்துகிறான்!
அவனைத் தூக்கும் போதும்
கொஞ்சும் போதும்
அணைக்கும் போதும்
முத்தமிடும் போதும்
மட்டும் அல்ல ...
உன் கோபத்தைக் கூட
துல்லியமாய் ,
உணர வைத்திருக்கிறான் !
சுருக்கமாய் சொன்னால் ,
அவனால் என்னில் நான்
உன்னை காண்கிறேன் !
அவன் அம்மா... என்று
அழும்போது ,
அவனோடு சேர்ந்து
எனக்கும் ஏனோ
காரணம் இல்லாமல்
கண்களில் கண்ணீர்
அரும்புகிறது ...
ஆமாம் தாய்மையை
தாராளமாய் கற்றுத் தந்துவிட்டதே
இந்த கன்று !
இறைவனின் படைப்பை
வியக்கிறேன் !
ஒன்றும் தெரியாமல்
பிறக்க வைத்தான் !
பாசத்தை கற்க
உன்னைக் கொடுத்தான் !
விட்டுக்கொடுப்பதைக் கற்க
உறவைக் கொடுத்தான் !
நல்லதைக் காண கல்வி
அறிவைக் கொடுத்தான் !
உலகை உணர
விடுதியில் சேர்த்தான் !
உன் உழைப்பை உணர
உழைக்க வைத்தான் !
காதலை உணர
கணவனைக் கொடுத்தான் !
குறையை சுட்ட
சுற்றத்தைக் கொடுத்தான் !
தாய்மை கற்க
மகனைக் கொடுத்தான் !
வலிகளைப் பொறுக்க
வேதனைகள் கொடுத்தான் !
கடைசியில் உனக்கு ஒன்றுமில்லை
என்பதை
உணரவா உன்னை எடுத்தான் !
உண்மை புரியவில்லை !
ஆம் ! இறைவனை வியக்கிறேன் !