விடியும் வரை போராடு
ஒற்றையாய் இருக்கையிலே
ஒடித்து முறிக்கலாம் சுள்ளியை !
ஒரேகட்டில் பலஇணைந்தால்
ஒடித்து முறிப்பது சுலபமோ ....??
ஒற்றைவிரல் வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய இயலாதே !
ஒன்றுசேர்ந்த விரல்பத்தும்
ஒப்பிலா மூலதன மாகுமே ...!!
சமயத்தால் வேறுபடினும்
செந்தமிழ் உணர்வால் ஒன்றுபடின்
சதியையும் முறியடித்து
சரித்திரம் புதிதாய் படைத்திடலாம் ...!!
சாதியைப் புறந்தள்ளி
சமரசமாய் தமிழர் ஒன்றிணைய
சாகாநெஞ்சம் கொண்டு
சாதனை பலவும் நிகழ்த்திடலாம் ...!!
ஊரேயாதும் கேளிர்யாவருமென
எழுத்தில் படித்தால் போதுமா ?
உலகஅரங்கில் வல்லரசாய்மிளிர
தமிழ்தேசியம் மலரச்செய்திடுவோம் ...!!
முப்பாலாம் தமிழ்ப்பாலை
முலைப்பாலுடன் பருகியதமிழா ....!!
முழுமூச்சாய் பொங்கியெழு !
முழுதாய் விடியும்வரை போராடு ....!!!
--ராஜ லட்சுமி
17 சனவரி 2014