தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய்.

சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல
கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? -

வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர்.
மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
நான் என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
ஏன் என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

எழுதியவர் : Akramshaaa (19-Jan-14, 6:09 pm)
பார்வை : 81

மேலே