ஏக்கம்
மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு
மூவைந்து வருடமாச்சு
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை
மூடர்வார்த்தை தைத்திடுதே !
மூடுபனி என்வாழ்வை
மூடிவைத்த மாயமென்ன
மூப்புவந்து சேருமுன்னே
மூரலென்னுள் மலராதோ ?
வளைஅடுக்க வழியில்லை
வளைகாப்பு நடக்கவில்லை
பூச்சூடிப் பார்க்கவில்லை
பூயென்னுள் பூக்கவில்லை !
பனிக்குடம் உடைந்ததில்லை
பால்வடிந்து மணந்ததில்லை
பழிசுமந்து கிடந்திடவே
பாவமென்ன செய்தேனோ ?
சொத்துசுகம் இருந்தென்ன
சொர்க்கமே பிள்ளையன்றோ
தாய்மைவரம் வேண்டுகின்றேன்
தாயாகத் தவிக்கின்றேன் !
மார்பணைத்துப் பால்புகட்ட
மங்கைமனம் துடிக்கிறதே
மறலிவந்து கூப்பிடுமுன்
மழலைமடி நிரப்பாதோ ?
மலடியென்ற பட்டத்துடன்
மயானம்போக மனமில்லை
மாதம்பத்து நான்சுமக்க
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!