புகை என்றும் பகையே உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

இழுக்க இழுக்க இன்பம் வரலாம்
ஊத ஊத உற்சாகம் பிறக்கலாம்
இதுவே இதுவே தொடர்கதை யானால்
நோயிற் கொடிய புற்றும் வரலாம் !

சங்கிலித்தொடராய் புகை உள்ளிழுத்தால்
நாடி நரம்பும் தளர்ந்திடுமே !
சுவைதிறன் நுகர்திறன் குறைந்திடுமே !
இதயமும் பாதிப்பு அடைந்திடுமே ....!!

புற்றுநோய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பே
புகைப்பதும் புகையிலை போடுவதும் தானே !
புதைகுழியெனத் தெரிந்தே கால்விடலாமோ !
புரிந்தே தவறு செய்தல் முறையோ ...??

விடும் புகை கூட இருப்போரையும்
விடாது பற்றும் விவரம் தெளிவீர் !
விதிவந்து முடிவு ஏற்படும் முன்பே
வலியவே சென்று வீழ்தல் தகுமோ .....??

சேர்ந்து புகைக்க பலர் கூடுவார்
சோர்ந்து சரிவர் புற்று வந்தால்
தடுப்போம் தவிர்ப்போம் சவக்குழலை
தனக்குத் தானே கொள்ளி தேவையா ....??

புகை நமக்குப் பகையென உணர்வீர் !
புற்றுக் கென்றும் முற்றுப்புள்ளி வைப்பீர் !
புகையிலை பொருட்கள் அறவே தவிர்ப்பீர் !
புதுப் பிறவி எடுத்தாற்போல் உணர்வீர் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Feb-14, 11:09 am)
பார்வை : 678

மேலே