இரட்டை குழந்தைகள் பிறப்பதின் ரகசியம்

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 70% அதிகரித்திருக்கிறதாம். 2009 ஆம் ஆண்டில் 30 குழந்தைகளுக்கு ஒரு இரட்டையர் இருந்தனர்; 1980 இல் இது 53 குழந்தைகளுக்கு ஓர் இரட்டையர் என்ற கணக்கில் இருந்ததாம். இது எதனால்?

குழந்தை பெற்றுக் கொள்ளும் தாயின் வயது ஒரு காரணம் என்கிறது ஒரு ஆய்வு. தங்களது 30 வது வயதில் தாயாகும் பெண்ணிற்கு இரட்டையர் பிறக்கிறது. இயற்கையாக கருவுறும் பெண்களை விட கருவுறுதலுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகம்.

நம்மை வியக்க வைக்கும் இன்னொரு செய்தி:

இரட்டையர் என்றால் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் என்பதுதான் நமக்குத் தெரியும். அப்படியில்லை என்கிறது இந்தச் செய்தி. இயற்கைமுறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் ஒரு தம்பதி செயற்கைமுறை கருத்தரிப்பு செய்துகொள்ள முடிவு செய்தனர். பெண்ணின் முட்டையும் விந்துவும் வெளியில் சோதனைச்சாலையில் இணைக்கப்பட்டு பிறகு பெண்ணின் கருப்பையில் இரண்டு சினைமுட்டைகள் வைக்கப்பட்டன. ஒன்று ஆண் குழந்தையாக உருவானது. இவர்களுடைய மற்ற மூன்று சினைமுட்டைகள் பதப்படுத்தி பத்திரமாக வைக்கப்பட்டன. சில வருடங்கள் கழித்து இந்த முட்டைகளில் ஒன்றை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து இந்த முறை ஒரு பெண் குழந்தை உருவானது. என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உருவான சினைமுட்டையிலிருந்து பிறந்ததால் இவர்களும் இரட்டையர் என்று சொல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்னும் வியப்பான செய்தி: இத்தாலி நாட்டிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில் கருப்பையில் வளர்ந்து வரும் இரட்டையரை 3D ஸ்கான் செய்து பார்த்திருக்கிறார்கள். 14 வாரங்கள் ஆனபோது சிசுக்கள் இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வந்து தலை, கை முதலானவற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டனவாம். 18 வாரங்களில் இரண்டும் ஒன்றையொன்று தடவிக் கொண்டனவாம். சுமார் 30% நேரம் இதைபோல உடல்தொடர்புடன் இருந்தனவாம். இதில் மேலும் வியப்படைய வைக்கும் நிகழ்வு என்னவென்றால் கண் பகுதியை ரொம்பவும் மென்மையாக தொட்டுக் கொண்டனவாம்.

பிரேசில் நாட்டில் இருக்கும் சாவோ பெட்ரோ இரட்டைக் குழந்தைகள் அதிகம் பிறக்கும் இடம் என்று சொல்லலாம். இங்கு பிறக்கும் குழந்தைகளில் 8% இரட்டையர்களே. என்ன காரணமாக இருக்கும்? இந்த ஊரின் தண்ணீர் அப்படி என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இதை ஒத்துக்கொள்ள மறுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு ஒன்றை இங்கு நடத்தினர். அதான் மூலம் இந்த நகரத்தில் வசிக்கும் மக்களிடைய நெருங்கிய உறவுக்குள் மணம் செய்து கொள்ளும் பழக்கத்தினால் இப்படி இரட்டையர் பிறக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இரட்டையர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்துவிட்டால் ஒரே மாதிரி உடை அணிவிப்பார்கள். பெண் குழந்தைகள் என்றால் ஒரே மாதிரியான உடை, வளையல்கள், ரிப்பன்கள், காதணிகள், செருப்புகள் என்று அணிகலன்கள் கூட இரட்டையாகவே இருக்கும். இவை வெளியில் காணப்படும் ஒற்றுமைகள். ஆனால் குணத்தில், அறிவில் இருவரும் ஒன்றே போல இருப்பார்களா? இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்ய ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் இரட்டையரான மெரிடித் கிரேஸ், மெரிடித் எல்லன். சீன நாட்டில் பிறந்த இந்த இரட்டையர் பிறந்தவுடனேயே அமெரிக்காவிலுள்ள வேறு வேறு தம்பதிகளால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டனர். 2003 ஆம் ஆண்டு இவர்களை தத்து எடுத்துக்கொண்ட பெற்றோர்களுக்கு இவர்கள் இரட்டையர் என்ற விஷயம் தெரியாது. எல்லன் இரண்டு வயதில் தன் பெற்றோர்களிடம் ‘எனக்கு ஒரு சகோதரி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறாள். கிரேஸ் ‘நான் பெரியவள் ஆனால்….?’ என்ற கேள்விக்கு சகோதரி ஆவேன் என்று பதில் கூறியிருக்கிறாள். கிரேஸ்ஸின் தந்தை இணையத்தில் தன்னைப்போலவே தத்து எடுத்துக் கொண்டுள்ள பெற்றோர்களைப் பற்றி படித்துக் கொண்டிருந்தபோது தன் மகளைப் போலவே இன்னொரு பெண்ணைப் பார்த்திருக்கிறார். இவர் தத்து எடுத்துக்கொண்ட ஏஜென்சி மூலமே இந்தப் பெண்ணும் தத்து எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறாள். இரட்டையர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்தபோது எல்லன் கூறினாள் கிரேஸிடம்: நாம் இருவரும் ஒன்றாகப் பிறந்திருப்போம் என்று நினைக்கிறேன்’ என்று!

இரட்டையராகப் பிறந்து ஒன்றாக வளரும் குழந்தைகளுக்கும், இரட்டையாரகப் பிறந்து பிரிக்கப் பட்டு வேறு வேறு இடங்களில் வளரும் குழந்தைகளுக்கும் இடையில் எந்தவிதமான அறிவுத் திறன், ஆளுமை ஆகியவற்றில் இருக்கும் வேற்றுமை ஒற்றுமைகளை என்று இப்போது ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருகிறார்கள்.

நாம் நினைப்பது போல இரண்டு ஆண்குழந்தைகள், இரண்டு பெண்குழந்தைகள் என்று பிறக்கும் இரட்டையரில் அச்சு அசலாக ஒற்றுமைகள் இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். பிறந்தவுடன் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் வளர வளர மாறிவிடுகிறார்களாம்.

எழுதியவர் : முரளிதரன் (6-Feb-14, 1:34 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 308

மேலே