விடியல்
விடியல்
வேலைகள் தேடிடும் வாலிப உணர்வின்
முடிவியினில் கிடைத்திடும்
வேலை எனும் விடியல்!
வியர்வை சிந்தி உழைப்பவர் தனக்கும்
முடிவினில் கிடைத்திடும்
கூலி எனும் விடியல்.
பெண்ணாய் பிறப்பவள் பெருமைகள் சேர்த்திட
முடிவினில் வந்திடும்
தாய் எனும் விடியல்.
பொதியென புத்தகம் பொழுதெல்லாம் சுமந்தவர்
பலருக்கும் வருவது
பட்டம் எனும் விடியல்,
பட்டங்கள் சுமந்து படிகள் ஏறி
அலைபவர் தமக்கு
வேலை எனும் விடியல்,
நடந்திடும் நதிகள் நெல்மணி விளைத்து
கலந்திடும் கடல்தான்
நீருக்கு என்றும் விடியல்.
ஆசைகள் கோடியாய் அலைந்திடும் மனதில்
நிலையாய் நிற்க
வருமோ என்றும் விடியல்.
-----------------------------
உழைப்பு
உழைப்பவர் என்றும் வீழ்வதில்லை-எனும்
உண்மைகள் என்றும் மாள்வதில்லை
பிழைப்பே உழைப்பால் என்றாகும்-அதைப்
பழித்திடல் எப்படி நன்றாகும்.
---------------------