ஒரு கதை

மச்ச நாட்டு மன்னன் மகேந்திரன். அவனது நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடு மருத நாடு.

மருதநாட்டு மன்னன் சுரோசனன். மருத நாடு படைபலம் கொண்டது. ஆனால் மச்சநாடு அந்த அளவுக்கு படை பலம் கொண்டதல்ல.

மகேந்திரன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தபடியால் மருத நாட்டை வெல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தான். அதனால் அடிக்கடி சுரோசனன் மீது படையெடுத்து வந்தான்..

தோல்வியடைந்த போதும் மீண்டும் மீண்டும் மருத நாட்டின் மீது படை எடுத்த வண்ணம் இருந்தான்.

சுரோசனனின் நாடும் பெரிது படையும் பெரிது. ஆனாலும் மகேந்திரன் தோல்வியடைந்த வண்ணமே இருந்தான்.

ஒருமுறை ஒற்றர் மூலம் மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போவதை அறிந்த சுரோசனனின் மதியூக மந்திரி மகிபாலர் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"மன்னா, மகேந்திரன் மீண்டும் படையெடுக்கப் போகிறானாம். நமது படைகளைச் சற்று சீரமைக்கவேண்டும். கட்டளையிடுங்கள்" என்றார்.

சுரோசனன் சிரித்தான்."மந்திரியாரே, எத்தனை முறை அவன் படையெடுத்தாலும் அவனால் நம்மை வெல்ல இயலாது.நமது படைக்குமுன் அவன் படை எம்மாத்திரம்?"

"அப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது மன்னா, நமது வீரர்கள் போரிட்டுக் களைத்திருப்பர் என்றுதான் மீண்டும் உடனே படையெடுத்து வருகிறான். நமது குதிரைப் படைதான் நமது வெற்றிக்குக் காரணம். குதிரைகளும் நமது படையில் அதிகம். அவை பலமுறை போரிட்டதால் கால்களிலுள்ள குளம்புகளில் ஆணிகள் தேய்ந்து போய் விட்டன. அவற்றிற்கு லாடம் அடிக்க வேண்டும். அப்போது தான் நம்மால் படை நடத்த முடியும்." என்றார் பணிவோடு.

ஆனால் சுரோசனன், "இப்போது அதற்கு அவசரமில்லை. மகேந்திரனின் படையை வெற்றிகொண்டு துரத்திய பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்று அலட்சியமாகக் கூறி விட்டான்.

சில நாட்களில் மகேந்திரன் மீண்டும் படையெடுக்க, சுரோசனன் புன்னகையுடன் தன் குதிரைப்படையை நடத்திச் சென்றான். திடீரென்று படையிலிருந்த குதிரைகள் கீழே விழுந்தன. சில சரியாக ஓட முடியாமல் தடுமாறின.

மகேந்திரனின் படை சிறிதானாலும் எல்லா வகையான பராமரிப்பும் செய்யப்பட்டிருந்தன. குதிரைகள் லாடம் அடிக்கப்பட்டு நன்கு ஓய்வெடுத்து போருக்குத் தயாராக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தன. ஆனால் சுரோசனன் படையோ பெரியதாக இருந்தாலும் போதிய பராமரிப்பு இன்மையால் பாதிக்குமேல் படுத்து விட்டன.

மன்னன் சுரோசனனும் அச்சமும் சோர்வும் அடைந்து விட்டான். தக்க தருணம் பார்த்து மகேந்திரன் சுரோசனனையும் மந்திரி மகிபாலரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."

துன்பம் வருவதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்யத் தவறியவர்கள் வாழ்க்கை நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போரின் நிலையை அடையும்.

எழுதியவர் : (11-Feb-14, 10:27 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : oru kathai
பார்வை : 168

மேலே