என்னோடு நீ இருந்தால்

கண்களிலே காந்தம் வேண்டும்!
காண்போரைக் கவர்ந்த் திழுக்க வேண்டும்!
காண்போரெல்லாம் மகிழ வேண்டும்!
கண்களிலே நீயிருந்து ஒளிர வேண்டும்!

இறைவா!
என் கண்களிலே நீயிருந்து ஒளிர வேண்டும்!

வார்த்தையிலே தெளிவு வேண்டும்!
பேசிடும் மொழிகள் இனிக்க வேண்டும்!
பேசிடக் கேட்போர் உருக வேண்டும்!
நாவினிலே நீயிருந்து இசைக்க வேண்டும்!

இறைவா!
என் நாவினிலே நீயிருந்து இசைக்க வேண்டும்!

நடையினிலே கம்பீரம் வேண்டும்!
நடையினைப் பார்ப்போர் பின்தொடர வேண்டும்!
இடையினில் வருகின்ற இன்னல்கள் நீக்கிட
என்னோடு எப்போதும் நீ வர வேண்டும்!

இறைவா!
என்னோடு எப்போதும் நீ வர வேண்டும்!

நெஞ்சினிலே நேர்மை வேண்டும்!
நெஞ்சத்தின் கனவுகள் நனவாக வேண்டும்!
நினைவுகள் அத்தனையும் ஆக்கம் பெற
நெஞ்சுக்குள் நீயிருந்து ஆள வேண்டும்!

இறைவா!
என் நெஞ்சுக்குள் நீயிருந்து ஆள வேண்டும்!

எழுத்தெல்லாம் கவியாக வேண்டும்!
படிப்போர் அனைவரும் கரைய வேண்டும்!
எழுத்தாலே எல்லோரும் எழுச்சி பெற
கைகளிலே நீயிருந்து அசைக்க வேண்டும்!

இறைவா!
என் கைகளிலே நீயிருந்து அசைக்க வேண்டும்!

சுற்றம் சூழ வேண்டும்!
உற்றார் உயர வேண்டும்!
உற்றோரும் சுற்றமும் மற்றெல்லா மிருந்தாலும்
பற்றற்றிருக்கப் பழக வேண்டும்!

இறைவா!
நான் பற்றற்றிருக்கப் பழக வேண்டும்!

கண்களிலே நீ வேண்டும்!
நாவினிலே நீ வேண்டும்!
கைகளிலே நீ வேண்டும்!
நெஞ்சுக்குள் நீ வேண்டும்!

இறைவா!
எப்போதும் என்னோடு நீ வேண்டும்!

எழுதியவர் : மனோ & மனோ (25-Feb-14, 10:12 am)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 178

மேலே