என்ன வேண்டும் ?

நிலவுக்குள் சூரியனை ஒளித்து வைக்க வேண்டும்
நிஜம் என்றும் நிழலோடு சேர்ந்திருக்க வேண்டும்
பருவத்தின் கனவெல்லாம் பலித்துவிட வேண்டும்
படிக்காமல் பட்டங்கள் நொடிப்பொழுதில் வேண்டும்

தொடக்கத்திலே முடிவுநிலை தெரிந்துவிட வேண்டும்
தோல்வியினி இல்லையென காதல்சொல்ல வேண்டும்
வன்முறையை சத்தியத்தால் வழிமறிக்க வேண்டும்
வார்த்தைகளை சேர்த்து ஒரு மௌனம் செய்ய வேண்டும்

கடலலைகள் கால்பார்த்து பின்வாங்க வேண்டும்
கவிதைக்குள் மொழிகொஞ்சம் இளைப்பாற வேண்டும்
தொடும்போதே பூமலரும் சுகம் உணர வேண்டும்
தூக்கத்தின் தேசத்தில் காவல்காக்க வேண்டும்

இருக்கையிலே இறப்போடு கைகுலுக்க வேண்டும்
இனியேனும் ஏழ்மைக்கொரு விடுப்புதர வேண்டும்
சொர்க்கத்தில் உள்ளவர்க்கு மடல் எழுத வேண்டும்
சொல்லாமல் என்பெயரை நானறிய வேண்டும்

எழுதியவர் : Rishivardhan (15-Feb-11, 12:27 pm)
சேர்த்தது : rishivardhan
பார்வை : 316

மேலே