உயிர் மெய் ஆன்மா - அஃகேனம்

அடைமழை நனைந்து
விடுத்தேன்
என் கண்ணீரை..!!
ஆழ்கடல் விழுந்து
எடுத்தேன்
உயிர் காதலை..!!
இறை மொழியென
உணர்ந்தேன்
அன்னையின் தீண்டலை..!!
ஈர்ப்பு விசைதன்னில்
சுழல்கிறேன்
சுழலும் சூரியனை..!!
உலைபோல் உறங்காமல்
உழல்கிறேன்
உள்ளொளி சூட்டினிலே..!!
ஊரார் அறியாமல்
பாடுகிறேன்
உயிரின் வாசலிலே..!!
எண்ணத்தால் எழுந்து
ஓடுகிறேன்
கனவுதேச முரண்பாட்டில்..!!
ஏக்கங்கள் பலசுமந்து
தவிக்கிறேன்
இறக்கிவைக்க முடியாமல்..!!
ஐயிரண்டு திங்கள்
சுகித்தேன்
கண்ணீர் விடாமல்..!!
ஒருபிறவி உன்னோடுவாழ
விழைத்தேன்
மறுபிறவி முக்திகொள்ள..!!
ஓயாத உணர்வுகள்
கொண்டேன்
காயாத ஆசையினால்..!!
ஔவியம் வேண்டாமென
வேண்டுகிறேன்
அழகான இவ்வுலகில்..!!
அஃகேன நிலைநான்
கொண்டேன்
உயிரும் மெய்யும் விடுத்து..!!