நான் நன்றியுள்ள நாய்

ஆசையாய் கொஞ்சி
அன்பாய் வளர்த்த
என் எஜமானன்களுக்கெல்லாம்
நான் செல்ல பிள்ளை ......

உப்பிட்டவரை உள்ளவரை நினைக்கிறேன்
தப்பு செய்தவரை துரத்தியும் கடிக்கிறேன்
வன்முறையில் நாட்டமில்லை
வாலாட்டும் மறந்ததில்லை .......

ஒருவேளை சோத்துக்கு
உண்மையாய் உழைக்கிறேன்
நான் பட்ட கடனுக்கு
காவலும் காக்கிறேன் .......

மிருக ஜாதியென்று
ஒதுக்கும் மனிதனே
உன்னை விட நம்பிக்கையில்
நான் ஒரு படி மேல் .......

மிச்சத்தை உண்டு வாழ்ந்தும்
என் நிம்மதிக்கு பஞ்சமில்லை
நீதி நேர்மை படித்ததில்லை
நீதியோடு வாழ்ந்திட மறந்ததில்லை ......

கலகம் எனக்கு தெரியாது
துரோகம் எனக்கு பழக்கமில்லை
ஏமாற்றுதல் எந்தன் வழக்கமில்லை
விசுவாசமே என் விருப்பம் .......

காலத்திற்கு ஏற்ப
பேச்சை மாற்றும் மனிதா -
நான் குறைக்கும் நாய்தான்
என்றும் என் எஜமானங்களுக்கு மட்டும் .......

கடமைக்காக கண்ணீர்விடும்
கலியுக நாடகதாரிகளே
எங்களின் அழுகைக்கு ஈடேதும் இல்லை
என் எஜமான்களை மறந்ததில்லை .....

இறந்துவிட்ட எஜமானுக்கு
இரங்கல் செய்த நாளுண்டு
பாடையில் போன அவர்க்கு
நான் பட்டினியாய் கிடந்த நாளுண்டு .......

நடிக்க தெரியாத நாய்கள் நாங்கள்
நன்றியுள்ள ஜீவன்கள் நாங்கள்
வளர்த்தவருக்கு வாலாட்டி
வாழ்வை கழிக்கும் ஜீவன்கள் நாங்கள் ......

மிருகமென்ற கேவலம் வேண்டாம்
மிஞ்சிவிட்டேன் உன்னை விசுவாசத்தில்
ஐந்தறிவு ஜீவன் நான்
ஆறறிவு உன்னை வென்று விட்டேன் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Mar-14, 10:34 am)
பார்வை : 5563

மேலே