ரத்தப் போராட்டம்

யுத்த களம்.
எப்படிச் சொல்வது...?
கட்டிய மனைவி பின்
கோவலன் சென்றுவிட்டான்.
வெட்டியே தீருவேன் என
மாதவி.

கஜினி முகம்மதுக்கள்
சலிப்புற்று ஓய்ந்துவிட்டார்.
இப்போது
கட்டத்துரைக்களின்
கட்டப்பஞ்சாயத்து.

ராவண பூமியில்
சூர்ப்பனகைகள்
மூக்கரிபடுகிறார்கள்.
எல்லை தாண்டியது
யார் குற்றம்?

மேனகாக்கள்
மிரட்டுகின்றனர்
காமப்பார்வைகள்
காரியம் சாதிக்கவில்லை.

பங்குபார்த்தது
யார் குற்றம்?
கைகேயியா?கோசலையா?
வனவாசத்தில்
பரதர்கள்.

சிம்சோனின் கூடாரத்தில்
டிலைலாக்கள் மயிரரிகிறார்கள்.
உரங்கொள்ளச் செய்தது
உணர்வென்றறியாமல்.

பாதுகைகள் பட்டு
அகலிகைகள் உயிரிழந்தார்கள்.
ஆதிரைகளைப் பிரசவித்துக்கொண்டு...
'குருதிபுரக்கும் ஆதிரைகள்.'

சீதை கற்பழிக்கப்படுகிறாள்,
ராவணனுக்குப் பத்து தலைகளும்
அப்படியே.
ராமன் பசப்புகிறான்.
வானரங்கள் விடுவதற்கில்லை,
அக்கினிக் குண்டத்தில்
ராமன்.

விசுவாமித்திரர்கள்
பொய்யுரைக்க வேண்டியதாயிற்று,
அரிச்சந்திரர்களின்
தீரத்தால்.

செந்நிற தேவதை
குடிக்கக் கொண்டுவந்தாள்
குருதி தோய்ந்த கோப்பை.
புன்னகை பூத்து நின்றாள்,
குருதி மத்தியில்
குடியுரிமைப் பத்திரம்.

எழுதியவர் : ஆன்றிலின் (25-Mar-14, 11:12 am)
பார்வை : 849

மேலே