புதியதோர் உலகம் செய்வோம்

வாருங்கள்
வீர்ம் கொண்ட நெஞ்சங்களே வாருங்கள் !
வாருங்கள்
சீறிப் பாயும் சிங்கங்களே வாருங்கள் !

காலம் நமக்காக சாதகமாய் திரும்பும்
நாடும் நம்மாலே சிறந்திடவே விரும்பும் !

அதற்கெனவே பேரியக்கம் ஒன்றினைக்
காண்போம்
அலைகடலாய் ஓரணியில் நாமெல்லாம் இணைவோம் !!
**********
**********

இல்லாமை இல்லையெனச் சொல்லாமல் செய்வோம்
கல்லாமை இல்லையெனும் நிலையினைத் தருவோம்
பொல்லாத சாதியினைப் பள்ளியிலே
நினையோம்
எல்லோரும் சமமென்ற சொல்லுக்குப்
பணிவோம்

பண்பாட்டை பாடமாய் அமைப்போம்
பண்பட்ட குணத்தை வளர்ப்போம்
பலவித்தை பாடத்தில் சமைப்போம்
பள்ளியிலே சமுதாயம் படிப்போம்

இதுதான் நமது கொள்கை
இதுதான் நமது எண்ணம்
தோளோடு தோளாய் சேரவே
என்னோடு வாராய் வீரமே !
*************
*************

தேசத்தை வழிநடத்தும் நல்லவர்கள்
வேண்டும்
சேதத்தை ஏற்படுத்தாத சிந்தனைகள்
வேண்டும்
நேசத்தை போற்றுகின்ற மனிதர்கள்
வேண்டும்
நாசத்தை விளைக்காத எண்ணங்கள்
வேண்டும்

பலமொழி பேசிடும் நாடுதான்
பலஇனம் கூடிடும் கூடுதான்
பலமான ஒற்றுமை அறிவீரே
பாரதம் உயர்ந்திடத் துணிவீரே

இதுதான் நமது கொள்கை
இதுதான் நமது எண்ணம்
தோளோடு தோளாய் சேரவே
என்னோடு வாராய் வீரமே !
**********
**********

என்னோடு நம்பிக்கை கொண்டவர்
வரலாம்
தன்னோடு என்னையும் துணையாகப்
பெறலாம்
என்னாளும் தேசத்தின் நலத்தைத்
தேடலாம்
மண்ணோடு மாண்போடு உயர்த்தப்
பாடலாம்

ஒன்றான பாரதத்தைக் காண்போம்
ஒன்றாத பாவிகளை மிதிப்போம்
குன்றாத ஒளிதீபம் ஏற்றுவோம்
இன்றோடு பேதமை ஒழிப்போம்

இதுதான் நமது கொள்கை
இதுதான் நமது எண்ணம்
தோளோடு தோளாய் சேரவே
என்னோடு வாராய் வீரமே !

**********
**********

மாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சிதான்
மலரனும்
மாறிடாமல் சீர்கெடுத்த கட்சிகள்
மறையனும்
தோற்றத்தை மேம்படுத்தும் கருத்தே
நிறையனும்
ஏற்றத்தை காண்பதுதான் நினைவாய்
உறையனும்

என்னுடைய ஆசைகள் என்பதும்
பின்னடைவு ஆகிடாத நிலையாம்
என்னுடனே வருவீரே யாவரும்
இனியொரு விதியினை எழுதலாம்

இதுதான் நமது கொள்கை
இதுதான் நமது எண்ணம்
தோளோடு தோளாய் சேரவே
என்னோடு வாராய் வீரமே !

**********
**********

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (25-Mar-14, 6:50 pm)
பார்வை : 562

மேலே