சிற்றருவிச் சாரல் - மணியன்

கைகளில் அள்ளிப்
பைகளில் போட்ட ஞாபகம்
காணவில்லை காற்று. . . .
**********

இருக்கும் இடம் நகரவில்லை
இமயம் தொட்டது
என் கற்பனை . . . .
**********

ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாதுதான்.
கொடுத்துப் பாருங்கள்
கருவுக்கும் உதவும் . . . .
**********

முடியும் என்பதன்
எதிர்ப் பதம்
கேட்டாலும் சொல்லுவேன்.
என்னால் முடியும் . . . . .
**********

நீரூற்றியும் கழுவி விட்டேன்
கரைய வில்லை
அவள் நினைவு . . . .
**********

தலை குனிந்தேன்
என் தரம் உயர்ந்தது .
சொன்னது எழுதுகோல் . . . .
**********

உச்சிச் சூரியனை
எச்சிலால் உமிழ்ந்தேன்.
என் முகம் முழுதும்
வெண் பனி. . . . .
**********

விரலில் வைத்த மையினால்
என் முகம்
இப்போது கரியானது . . . . .
**********

வெளியின் வெளிச்சம்
பார்த்து அழுகிறது
சிசு . . . . .
**********

என்னைச் சுமக்க
ஏன் நாணுகிறாய்.
கேட்கிறது என் பாதணி . . . . .
**********

உயிர்
மெய்
உயிர்மெய்
ஆயுதமும் தந்தாள்
நம்மைக் காக்க
தமிழ் அன்னை . . . .
**********

அவளைக் கண்டேன்
இருநூற்றி நாற்பத்தி ஏழில்
நான்கினைக் காணவில்லை.
என் இதயம் . . . . . .
**********

இன்றாவது உறங்கு
இரவிலும் சொல்கிறது
இளித்தபடி என் கனவு . . . . . .
**********


*-*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (1-Apr-14, 12:10 am)
பார்வை : 95

மேலே