தேரில் வராத தேவதைக்கு
ஊதாப் பூவே - கண் சிமிட்டி
உள்ளம் கலந்தவளே - இந்த
உலகைக் கரைத்து - என்னுள்
ஊற்றி நிறைத்தவளே
உணர்ச்சிகள் குதித்தாடும் - மன
ஊர்வல நெரிசலில் - என்
ஊமைப் புலம்பலுக்கு - உன்
வழியைத் திறந்துவிடு
*
நேற்றின் ராகங்களை - புது
நேச கீதங்களை - நீ
காற்றில் கரைத்துவிட்டால் - அந்தக்
காதல் என்னாவது?
கால காலங்களை - வெல்லும்
கவிதைகளைத் தந்தேன் - கவிக்
கனவுகள் தீப்பிடித்தால்- சுமந்த
கண்கள் என்னாவது?
காதல் திருச்சபையில் - படித்த
வேத வரிகளெலாம்
தீதென நீயுணர்தால் - புரிந்த
தவங்கள் என்னாவது?
நிலாவின் கீழ் நினைத்த- அந்த
நினைவுகள் என்னானது - உன்னில் நான்
உலா காலங்களில் - விதைத்த
உண்மைகள் என்னானது?
தாகங்களைக் குடித்து - தவித்த
தவிப்புகள் என்னாவது - விழி
ஈரங்களில் குளித்து - துடித்த
துடிப்புகள் என்னாவது?
கண்களிலே விரியும் - என்
கேள்விகள் என்னாவது - அடீ
கண்ணீர் நெய்யூற்றி - வளர்த்த
வேள்விகள் என்னாவது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
