நிழல்களின் நிறங்கள்

நீலமாய் நீலமாய்
மிதக்குமிந்த
மயக்க பூமியில்
தரையிறங்கும் தேவதைகள்...

இந்த ரகசியத்தீவில்
சொர்க்கத்தின் பூக்களை இறைத்துவிட்டு
புறப்பட்டுச்சென்ற புஷ்பக விமானங்கள்
தூரத்துப் புள்ளிகளாய்…..

வெண்சிறகாடிவரும்
விண்சொர்க்க பெண்களின்
ஸ்பரிசம் தேடி
விரைந்த கால்கள் சரிந்த இடம்
ஒரு குகையாய்...

இந்த மர்ம குகையில்
மாயச்சிலந்தியின்
வலைப்பின்னல்களும்
பொன் ஜரிகைகளாய்

இங்கு திடுக்கிடும்
பயங்கரமும் அழகுதான்
தீயின் இதழ்களாய்…
திகில்களாய்...

ஜென்ம ஜென்ம
ஞாபகங்களின்
நிழல்களும்
வண்ணங்களாய்….

ஆழ்மனப் பறவையின்
அழகிய சிறகடிப்போ….?

இரவுப்பூவில்
நிரம்பி வழியும்
உறக்க மதுவின்
கிறக்கமோ….?

இறையோவியன்
உதறும் தூரிகையின்
சிதறல்தானோ…?

இலலை,
நிறைவேறாத எண்ணங்களின்
காலி கிண்ணங்களோ...
எதுவோ...இந்தக் கனவுகள்...?

எழுதியவர் : கவித்தாசபாபதி (14-May-14, 8:20 pm)
பார்வை : 114

மேலே