நல்ல ஒழுக்கம் எதுவென்று அறிந்தவர்கள் - ஆசாரக் கோவை 37
பிறர்மனை கட்களவு சூது கொலையோ
டறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் - திறனிலரென்
றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
செல்வழி யுய்த்திடுத லால். 37 ஆசாரக் கோவை
பொருளுரை:
நல்லொழுக்கம் இல்லாதவரென்று இகழப்படுவது மட்டுமின்றி, நரகத்துக்கு செல்லும் வழியில் செலுத்தும் என்பதால்,
பிறருடைய மனையாளை விரும்புவது,
போதை தரும் கள், மது குடிப்பது,
பிறர் பொருளைக் களவு செய்வது,
சூதாடுவது,
கொலை செய்வது
ஆகிய ஐந்து செயல்களையும் நல்ல ஒழுக்கம் எதுவென்று அறிந்தவர்கள் மனத்தாலும் நினைக்க மாட்டார்கள்.
‘செல்வழி யுய்த்திடுத லான்' என்றும் பாடம்.