ஆதரவற்ற குழந்தையின் ஆதங்கம் 0தாரகை0

நிரம்பி வழிகிறது
எங்களைத் தேடி
மருத்துவமனைகளும்
திருத்தலங்களும்

நிர் கதியற்று
எறியப்படுகின்றோம்
அரசு தொட்டில்களிலும்
அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும்

பருவத்தின் அராஜகத்தால்
திருமணத்தின் முன்னரே
ஈருடல் பசியாற நடந்த
அரங்கேற்ற வேளையால்
அவதானிக்கும் பிறவிகள்.
தெருக்களில் திரியும்
எங்கள் சிலரின் பூர்வீகம்.

அரும்பியதுமோ இல்லை
அரைகுறையாய் வளர்ந்ததுமோ
அறுத்து கூறுபோட்டு
அப்புறப்படுத்தப்படும் நாங்கள்
மிருக மோதலில்
சிதறப்படும் இறைச்சி துண்டுகள்

தாயின் ஸ்பரிசம்
தாயின் பாசம்
தாய் பால்
நாயிற்கும் கிடைக்கும்.
காய்கின்றோம் நாங்கள்.

உங்களின் நிறைவேறா ஆசைகளை
மாலையாக்கி அணிவிக்கின்றீர்கள்
எங்களின் கழுத்தை நெரிக்கிறது
நிர்பந்த இலட்சியங்களாய்

தூரிகை தேடுகின்றோம்
எழுதுகோல் திணிக்கப்படுகிறது.
மாறுபட்டு சிந்திக்கின்றோம்
வேறுபடுத்தி காட்டப்படுகின்றோம்.

சீர்கெட்ட இளைய சமுதாயமென
எங்களை ஏளனம் செய்யும்
நீங்கள் தானே எங்களின் பிரம்மாக்கள்.

ஆனால் உங்களால் நாங்கள்
சிருஷ்டிக்கப்படவில்லை
சிதறடிக்கப்படுகிறோம்.
செதுக்கப்படவில்லை.
சிதைக்கப்படுகின்றோம்.

எழுதியவர் : தாரகை (11-Jun-14, 3:47 pm)
பார்வை : 261

மேலே