செய்யத் தகாத செயல்கள் - ஆசாரக் கோவை 44
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டிற் படாஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல். 44 ஆசாரக் கோவை
பொருளுரை:
தானியங்கள் அளக்கும் நாழியை அமரும் மணை மீது வைக்கக் கூடாது.
மணையை கவிழ்த்து வைக்கக் கூடாது.
புத்தாடையை படுக்கும் பொழுது தலைக்கு மேல் பரப்பி வைக்கக் கூடாது.
பலரும் புகும் முன்வாசலில் ஆராயாமல் கட்டிலில் படுக்கக் கூடாது.
தம்மை அறியாதவர் எதிரில் நிற்கக் கூடாது.
கருத்துரை:
அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடை யைத் தலைக்கடையில் விரித்தலும், தலைக் கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகாது. தம்மை அறியாதார் எதிரில் நிற்காது இரு.
அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல் என்பதற்கு அறியாதார் கடைக்கண் நில்லாது விடுக எனினுமாம்.