கோடி இன்பங்களைப் பெற்றிடலாம்

​கருவறையில் தனிமைதான்
உருபெறும்வரை தனிமையே
வெளிவருகிறோம் தனியாய் !

வளர்கிறோம் பலருடன் நாம்
படிக்கிறோம் கூட்டமாய் நாம்
சிந்திக்கிறோம் தனியே நாம் !

விவாதிக்கிறோம் பலருடன்
விளையாடுகிறோம் பலரும்
விடை பெறுகிறோம் தனியே !

சிரித்து மகிழ்கிறோம் கூடியே
சிந்தையில் கொள்கிறோம் சில
சிந்திப்பதோ நாம் தனிமையில் !

துன்பம் நம்மை துரத்தினாலும்
இன்பம் காணலாம் தனிமையில்
இனிமையும் கூடும் தனிமையில் !

கொந்தளிக்கும் நெஞ்சம் அடங்கிட
கொஞ்சம் ஒதுங்கினால் தனியே
கொஞ்சிடும் மனமும் நம்மிடம் !

ஆர்த்தெழும் ஆறாத் துயரங்களும்
ஆர்ப்பரிக்கும் அளவிலா ஆசைகளும்
அமைதியே அடையும் தனிமையில் !

பழகிப் போன காரணத்தால் நான்
பகிர்கிறேன் மனதில் தோன்றியதை
பழகிடுவீர் நீங்களும் தனிமையை !

கற்பனைகளும் பெருகும் தனிமையில்
கவிதைகளும் பிறக்கும் மலைபோல
கவிஞர்களும் அறிவர் அனுபவத்தால் !

நாடி சென்றிடும் தனிமையில்தான்
கோடி இன்பங்களைப் பெற்றிடலாம்
தேடிச் செல்லுங்கள் தனிமையை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Jun-14, 8:20 am)
பார்வை : 215

மேலே