கோடி இன்பங்களைப் பெற்றிடலாம்

கருவறையில் தனிமைதான்
உருபெறும்வரை தனிமையே
வெளிவருகிறோம் தனியாய் !
வளர்கிறோம் பலருடன் நாம்
படிக்கிறோம் கூட்டமாய் நாம்
சிந்திக்கிறோம் தனியே நாம் !
விவாதிக்கிறோம் பலருடன்
விளையாடுகிறோம் பலரும்
விடை பெறுகிறோம் தனியே !
சிரித்து மகிழ்கிறோம் கூடியே
சிந்தையில் கொள்கிறோம் சில
சிந்திப்பதோ நாம் தனிமையில் !
துன்பம் நம்மை துரத்தினாலும்
இன்பம் காணலாம் தனிமையில்
இனிமையும் கூடும் தனிமையில் !
கொந்தளிக்கும் நெஞ்சம் அடங்கிட
கொஞ்சம் ஒதுங்கினால் தனியே
கொஞ்சிடும் மனமும் நம்மிடம் !
ஆர்த்தெழும் ஆறாத் துயரங்களும்
ஆர்ப்பரிக்கும் அளவிலா ஆசைகளும்
அமைதியே அடையும் தனிமையில் !
பழகிப் போன காரணத்தால் நான்
பகிர்கிறேன் மனதில் தோன்றியதை
பழகிடுவீர் நீங்களும் தனிமையை !
கற்பனைகளும் பெருகும் தனிமையில்
கவிதைகளும் பிறக்கும் மலைபோல
கவிஞர்களும் அறிவர் அனுபவத்தால் !
நாடி சென்றிடும் தனிமையில்தான்
கோடி இன்பங்களைப் பெற்றிடலாம்
தேடிச் செல்லுங்கள் தனிமையை !
பழனி குமார்