அவள் அப்படித்தான் - சிறுகதைப் போட்டி

அவள் அப்படித்தான்.

காந்தா மிக மிக நல்லவள். அழகியும் கூட. பெற்றோர் இல்லாத குறையை தாய் மாமன் தீர்த்து வைத்து விட்டதால், பருவம் பொங்கும் குமரியாகி, பட்டப் படிப்பும் முடித்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும் செய்து வருகிறாள். அவளோடு சேர்ந்து வேளை செய்வதோடு மட்டும் அல்லாமல் அவளது அறையை அவளுடன் பங்கு போட்டுக் கொள்பவள் காவியா.

காவியா, அதீத அழகி. அவள் இதுவரை எவரையும் காதலிக்கவில்லை எனினும் அவளை
சுமார் இருபது பேராவது காதலித்து இருப்பர். ஆயினும் அவள் எனக்கேற்ற ஆண்மகன் எங்கோ பிறந்து இருக்கிறான். ஆனால், அவன் எவன் எனத் தெரியவில்லை என எல்லோரிடமும் நட்புடன் பழகுவதாய் சகலமும் பழகி வந்தாள். அவளது இந்த எல்லாப் பழக்கமும் அவளுக்கு மட்டுமே ரகசியம். அவளது அறைத் தோழிக்குக் கூட அது தெரியாது.

காந்தா முன்னார் வேலை பார்த்த கம்பெனியின் மேலாளராய் இருந்த கண்ணன் அவளிடம் சாடை மாடையாய் சொல்லியும் பின் காந்தாவுக்கு லவ் லெட்டெர் கொடுத்தும் கூட அவன் மீது ஒரு ’இது’ இருந்தும் காந்தா அவனுக்கு பிடி கொடுத்துப் பேசாமல் இருந்து விட்டாள்… வேலை மாறி வந்த பின்னர் அவனைப் பார்க்காமல் இருக்கும்போதுதான் அவளுக்கு அவன் மீது இருந்த ஈர்ப்பு புரிந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்கள் எதேச்சையாக ஒரு திரை அரங்கில் சந்தித்துக் கொண்டபோது அது மீண்டும் துளிர்த்து வேர் விட ஆரம்பித்து விட்டது.

கண்ணன், தனக்கு ஏற்கெனவெ திருமணமாகி மனைவி இறந்து விட்டாள் என்றும், பிள்ளைகள் ஏதும் இல்லை எனவும் உண்மையைக் கூறியபொழுது அவனது நேர்மை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. மாலை நேரத்தில் இருவரும் தவறாமல் சந்தித்து வந்தது போக சனி ஞாயிறு விடுமுறைகளில் நாள் முழுவதும் சேர்ந்து இருக்க ஆரம்பித்து கடைசியில் காவியாவின் அறைக்கே வந்து அவர்களோடு சமையல் செய்து சாப்பிட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு அவர்கள் காதல் வளர்ந்து விட்டது.

கண்ணன் காந்தாவை திருமணம் செய்ய இருப்பதை தனது அறைத்தோழி ஆகிய காவியாவிற்கு ஏற்கெனவே கூறி இருப்பினும், அவர்கள் அறையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காவியா அதிகாலையில் அறையை விட்டுச் சென்று விடுவாள். எங்கு செல்வாள், என்ன செய்வாள் என்றெல்லாம் காந்தா அதிகம் கவலைப்பட மாட்டாள்.

ஒரு சனிக்கிழமை காந்தாவை அழைத்துக் கொண்டு திருத்தணி செல்ல இருந்த கண்ணன் முதன் முறை காவியாவை சந்தித்தான். ஆயினும் அவளைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட காந்தாவிடம் அவன் கூறவே இல்லை. ஆயினும் காந்தாவின் திருமணத்திற்கென அவளுக்கு நல்ல புடவை வாங்கிட, காஸ்மெடிக்ஸ் வாங்கிட காவியா அதிகமாய் உதவி செய்துவந்தாள்.
தனது முதல் மனைவியின் தாலி கூட தன்னிடம் தயாராய் இருப்பதால் ’எப்ப கலியானம்’ என அவளை தினந்தோறும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.

அடுத்த வாரம், காந்தாவின் அழைப்பின் பேரில் அவர்களது அறைக்கு வந்த கண்ணன் விருந்து உண்பதற்கு என கே எஃப் சி. சிக்கன், பரோட்டா என பலவித பலவித அயிட்டங்களை வாங்கி வந்து வைத்து இருக்க, தன் பங்குக்கு, காவியா எங்கிருந்தோ மீன் குழம்பு, மீன் வறுவல் எனப் பிடித்து வந்து ஏகப்பட்ட அமர்க்களப்படுத்தி விருந்து அளித்தனர்.

அடுத்த மாதம் பதினாறாம் தேதி திருமணம் என ஏற்பாடுகள் செய்ய இருவரும் இணங்கி சென்றபோது, கண்ணன் அன்று மாலை தனக்கு தன் வீட்டில் வேறொரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். ’பாவம்’ என அவனுக்காக காவியா பரிந்து பேசியது காந்தாவுக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

“புண் பட்ட மனதை கொஞ்சம் புகை விட்டு ஆற்று என காவியா தனது கைப்பையில் இருந்த மெந்தால் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்ததோடு நில்லாமல், எவருக்கோ போன் செய்து ரெண்டு பீர் பாட்டில்களும் கொண்டு வரச் செய்தாள். இதெல்லாம் ஆண்கள் சர்வ சாதாரணமாகச் செய்யும்போது பெண்கள் ஆகிய நாம் சோடை போய் விடக் கூடாது என அவளை சமாதானப் படுத்தி அதில் ஒன்றும் பாவம் இல்லை என குற்ற உணர்வினைப் போக்கினாள். வாரம் ஒருமுறை சோகம் போக்கும் மருந்து என இருந்தது தினந்தோறும் என ஆகி விட்டது. இத்தனைக்கும் ஆகும் செலவுகள் அனைத்தும் காவியா மட்டுமே செய்தாள். பின் ஒரு நாள் ஒரு சனிக் கிழமை இரவில் ’பப்’ போகலாம் என கூட்டிச் சென்று குடித்து விட்டு வேறொரு நண்பர் வீட்டில் பார்டி என கூட்டிச் சென்று அவளை அடுத்த ஆடவருடன் கை கோர்த்து ஆடவும் வைத்தாள். கூல் டிரிங்கில் கலந்து இருந்த மாத்திரை அவளை சொர்க்கத்திற்கு கூட்டிச் சென்றதால், அதற்கெல்லாம் வழிவகுத்த காவியாவிற்கு அவள் நெஞ்சார நன்றி கூறினாள்.

திடீரென்று ஒரு நாள், காவியா அவளது அறையைக் காலி செய்து விட்டு அலுவலகம் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கப் போவதாகக் கூறிச் சென்று விட்டாள். தனிமரம் ஆன காந்தா, தன் தீய பழக்கங்களை நாளடைவில் குறைத்துக் கொள்ளலாம் என தீர்மாணித்து அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு தாய் மாமன் வீட்டிற்குச் சென்றாள்.

தன்னைப் பற்றி அவர்கட்கு எதுவும் தெரியாது என நினைத்து இருந்த காந்தாவுக்கு அத்தை அவளை முறைத்த முறைப்பிலும் அவளிடம் தன் பிள்ளைகளை அண்ட விடாமல் செய்த அவசரத்திலும் கொஞ்சம் புரிந்ததாயினும் முற்றும் புரியவில்லை. மாலை வேலை முடிந்து வந்த மாமா “அப்ப எப்ப கலியாணம்” எனக் கேட்டபொழுதுதான், தன் காதல் கதை அவருக்கும் தெரியும் எனப் புரிந்தது. தன் நிலைமையை எடுத்துக் கூறிய காந்தாவை ஆறுதல்படுத்திய மாமா,
”கவலைப் படாதே, அந்தக் கண்ணனை உனக்கு மணம் முடித்து விட்டுத்தான் மறுவேலை” எனக் கூறியது நிம்மதியைத் தந்தது.


மாமா எடுத்த முயற்சியால், நிச்சயித்த திருமணம் நின்று போய் விட்டது என்றும் அவன் அவளை மணக்கத் தயார் என்றும் அன்று அவள் வீட்டிற்கு வருவதாய் கண்ணன் கூறி இருந்தான்.

காந்தாவிற்கு நிலை கொள்ளவில்லை. அவசரம் அவசரமாய் சாதம் வடித்து, சிக்கன் பொறித்து, பீர் பாட்டிலும் வாங்கி வைத்து காத்து இருந்தபோது காவியா அங்கு வந்து விட்டாள்.

”என்னாடி ஒரே தடபுடலா சமையல் செய்து இருக்கெ”

இன்னைக்கி கண்ணன் வரப் போறார்.

“அப்படிச் சொல்லு”
இந்தா, ஒரு நிமிடம், இங்கு வந்து உட்காரு”.

அவளை ஒரு நாற்காலியில் அமரச் செய்தவள், அவளுக்கு ஃபேசியல் செய்தாள், பெடிக்யூர் செய்தாள், முகத்தை நன்கு அலம்பி விட்டு துவாலையால் துடைத்து விட்டு, ஏதோ புதிய க்ரீம் எனப் பூசி, மாநி.றமாக இருந்த காந்தாவை பொன்னிறமாகி விட்டு விட்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த காந்தாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

”இந்த அழுக்கு கலர் புடவை எல்லாம் வேண்டாம். பேசாமல் இந்த புது நைட்டியப் போடு”
என புதிதாக ஒரு பாக்கெட்டைத் திறந்து கொடுத்தாள். அதனை அணிந்து வந்த காந்தா தன் மீது தானே மோகம் கொண்டாள்.

‘ஏ இப்ப ஒன்னப் பாத்தா எனக்கே ஆசை வருதுடீ.. பாவம்டீ கண்ணன். நான் வேணும்னா
போய் விடட்டுமா” எனக் கேட்டாள்.

’சனியனே, சீக்கிரம் போகாமல் ஏன் இப்படி அவர் வரும் நேரத்தில் இவள் என் உயிரை எடுக்கிறாள்’ என நினைத்தவள், அதற்குள் ஸ்கூட்டர் வரும் சத்தம் கேட்டு,
“அவர் வந்து விட்டார்” என்றாள்.


வீட்டிற்கு வந்த கண்ணன், காந்தாவைப் பார்த்து,
குட் மார்னிங்”
என்றான். காவியாவிடம்,
”மேம், இந்த ரெண்டு வைர வளையல் என் மறைந்த மனைவியின் வளையல்கள். நல்ல இருக்கா பாருங்க”
எனக் கூறி நீட்டினான்.

”ஆஹா, அற்புதம்” எனக் கூறிய காவியா அவற்றை வாங்கி தன் கையில் போட்டுக் கொண்டாள். அதனைக் கண்ட காந்தாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

”ஏய், என்ன செய்ற? என அதிகாரமாய் கேட்டவளைப் பார்த்து, அமைதியாக,

”என் கைக்கென செய்தது போல் இருக்கிறது” எனக் கூறி,
”கொஞ்சம் இருங்கள்” எனக் கூறிவிட்டு விடு விடு என வெளியே சென்று விட்டாள்.

”மேம், மேம்”, என அவள் பின்னால் சென்ற கண்ணன் மீளத் திரும்பவே இல்லை. காந்தா செல்போனில் கூப்பிட்ட போதும் பதிலே அளிக்கவில்லை.

அடுத்த நாள் காந்தா அலுவலகம் வந்தபோது காவியா இருவார லீவில் சென்று விட்டாள் என்ற செய்தி இடியாய் இறங்கியது. அலுவலக ப்யூன், நீங்கள் வந்தால் கொடுக்கச் சொன்னார்கள் என கொடுத்த கவரில் ஒரு திருமணப் பத்திரிகையும் ஒரு அரைக்கடுதாசியும் இருந்தன.

திருமண அழைப்பிதழில், திருத்தணியில், காவியாவுக்கும் கண்ணனுக்கும் அன்று கலியாணமென்ற செய்தி அவளை நிலை குலையச் செய்தது. கொஞ்ச நேரம் கழித்து, சுதாரித்துக் கொண்ட அவள், அந்த கவருடன் கொடுக்கப்பட்ட பேப்பரில் என்ன இருக்கிறது என ஆர்வம் மேலிடப் பார்க்க வேண்டும் என அவசரமாகப் பிரித்தாள்.


காவியா தந்த அந்த சிறு தாளில் கவிதை போல ஏதோ எழுதி இருந்தது.
’அந்த காவ்யா மட்டும் என கைக்கு கிடைக்கட்டும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்’ என மனதிற்குள் கறுவிய காந்தா அந்த பேப்பரில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறது எனப் பிரித்துப் படிக்கலானாள்.

”உன்னை செயித்தேன் யான் ஒட்டாரம் செய்மதனா
என்னிடத்தில் முக்கண் ஈசன் இருக்கையினால்”

என ஏதொ கவிதை போல் எழுதி இருந்தது. என்னை செயித்தாயா, அடிப்பாவி, கடவுள் உன் பக்கமா? அப்படி என்றால் எல்லாம் திட்டமிட்ட நாடகமா எனக் கோபம் தலைக்கேறியவள் அந்த பேப்பரை கசக்கு கசக்கு எனக் கசக்கி உருண்டையாக்கி தூர விசிறி எறிந்தாள். அவளால் ஒன்றும் செய்ய முடியாதபடி காவியாவும் கண்னனும் தங்கள் தேன் நிலவுக்கென
கொடைக்கானலுக்கு காரில் பறந்து கொண்டு இருந்தனர்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (3-Jul-14, 4:58 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 130

மேலே