கனவு

மௌன இரவில்
தொலைத்த பகல்களை
நகல் எடுத்து பார்ப்பது.

இங்கு -
முடிஇல்லா மன்னர்கள்
முடி சூடினார்கள் .....
.முடவன் கொம்புத்தேன் அருந்தினான் .

வேகம் தெரியாத
விரைவு ஓட்டம்
நத்தைகள் ஓடின
முயல்கள் தோற்றன

நானும் ஓடினேன்
தொடமுடியாத தூரத்தில் இருந்த
நடிகையோடு நானும் ஓடினேன்.

என் பிச்சைப் பாத்திரத்தில் வந்து விழுந்த
ஒற்றை ரூபாயில்
இந்த நகரத்தை விலை பேசினேன்.

கிழிந்த சட்டை மாறி
காக்கி கால் டவுசர் போட்டு
காலால் உதைத்து மகிழ்ந்தேன்.
பகலில் வாங்கிய உதையின் வலி
இன்னும் வலித்தது.

எனக்கு இந்த கனவு பிடிக்கும்
இப்படியே விடியாமல் இருந்தால்
எவ்வளவு இனிக்கும்.

ஆம்-
கனவுகள்
மௌன இரவில்
தொலைத்த பகல்களை
நகல் எடுத்து பார்க்கின்றன.

எழுதியவர் : சுசீந்திரன் (3-Jul-14, 10:22 pm)
Tanglish : kanavu
பார்வை : 92

மேலே