மீண்டும் வானம்பாடி பொள்ளாச்சி அபி -போட்டிக் கவிதை

அகிம்சையின் பாதைகளில் எரிகிறது அக்கினி
நாடுகூட வேண்டாமெனத் துறந்த புத்தனின்
படைகள் இனமழித்து எக்காளம் இடுகின்றன.
உலகநாடுகளின் விசாரணைகள் ஊற்றிக் கொண்டன.

சன்னியும்,ஷியாவும் மோதிக் கொள்வதில்
நோன்புகள் எங்கோ புறந்தள்ளப் படுகின்றன.
அடைக்கலம் கேட்டு அலறும் குரல்களில்
அத்தனை மதங்களும் கலந்திருந்தன.

சேவையிலிருந்து லாபத்தடம் மாறுது ரயில்கள்
எரிவாயுவை இனியெட்டிப் பிடிக்க முடியாது.
முல்லைப் பெரியாறு நீருக்கு நூறுகோடி
லஞ்சத்தின் பிடியில் சரியும் பதினொருமாடி

உத்தரப் பிரதேசமும்,பொள்ளாச்சியும் சமமாகிறது
அழியாமலே இருக்கிறது தீண்டாமைச் சுவர்கள்
அக்கினிக் குஞ்சுகளாய்,அகிலத்தைப் புரட்டிவிட
வட்டமிட்டுப் பறக்குமோ மீண்டும் வானம்பாடி..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (5-Jul-14, 3:51 pm)
பார்வை : 224

மேலே