மீண்டும் வானம்பாடி

மீண்டும் வானம்பாடி

சிறகின்றிப் பறந்தோம் சிறாராய்ப் பள்ளியில்
கட்டவிழ்ந்த காளையராய்க் களித்திருந்தோம் கல்லூரியில்
பாடத்தில் திளைத்து மேடையில் முழங்கி
திடலில் விளையாடி கனவில் மிதந்து

காலடி வைத்தேன் நனவுலகில் நானும்
விழைந்தே ஏற்றேன் பயிற்றும் தொழிலை
உழைத்தே பெற்றேன் பணியினில் ஏற்றம்
உலகியல் கற்றேன் விழுந்தும் எழுந்தும்

இன்பமும் துன்பமும் இல்லறத்தில் துய்த்து
மனையாள், பிள்ளைகள், சுற்றமும் சூழ்ந்திட
சுமைகள் சுமந்து கடன்கள் முடித்து
காலச்சுவடுகளில் கற்ற பாடங்கள் பலவாம்

பணியில் ஓய்வொடும் வயதில் மூப்பொடும்
நினைவுச் சிறகுகள் விரித்தேன் மனவானில்
பாடிடலானேன் மீண்டும் வானம்பாடியாய் இன்று
யாண்டுகள் பலவாயினும் மீட்டெடுத்தேன் எனையே
சபா வடிவேலு

எழுதியவர் : சபா வடிவேலு (6-Jul-14, 12:07 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 145

மேலே