மீண்டும் வானம்பாடி ​

​கவியொன்று புனைய புறப்பட்டேன் நானும்
கவிஞன் என்றல்ல கவிதைகளின் ரசிகனாய் !
மீண்டும் வானம்பாடிகள் திரண்டன மேகமாய்
மீட்டின கானம்பல பொழிந்தன கார்காலமாய் !

வானம்பாடி வாலிபர்கள் வயோதிகம் அடைந்தாரோ
வானவில்லின் வண்ணமாய் கலைந்து சென்றாரோ !
வன்முறைகள் விதவிதமாய் நாளும் நிகழ்வதாலே
நன்முறைகள் நடைபெற வந்திடுக வானம்பாடிகளே !

இதயங்கள் இடமாறி இருட்டினிலே சுழலுவதால்
நம்பிக்கை ஒளியூட்ட வானம்பாடிகளே வந்திடுக !
பொல்லாமை இல்லாமை இவ்வுலகில் அகன்றிட
நில்லாமல் வந்திடுக நிலையாக வானம்பாடிகளே !

வறுமை ஒழிந்திட்டு வளமை நிலைபெற்றிட
வஞ்சகத்தீ அணைந்திட்டு நெஞ்சமும் குளிர்ந்திட
பஞ்சமா பாதகர்கள் பாரினில்இனி மறைந்திடவே
வசந்தம்வீச மீண்டும் வந்திடுக வானம்பாடிகளே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Jul-14, 4:07 pm)
பார்வை : 121

மேலே