திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 10

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே. பாடல் எண்: 10

குறிப்புரை :

நிலைபெற்று நின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பக்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும் பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாட்சிக்கின்றவன்.

திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞான நாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத் தமதறிவிலே கருதா நிற்பர்.

விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவு கொண்டார்.

ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதேது எனில், அன்னியமே கண்டனர்.

கண் எனற்பாலது காண் என நீண்டது.

என் பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை, என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும் தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டம் அழித்துத் தோன்றுபவனைத் தேடி, மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-14, 8:37 am)
பார்வை : 188

மேலே