அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர

முன்னுரை

கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும் கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம் பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம் யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும் இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு (அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்…..

பள்ளிகளின் பிரிவினைக்கான காரணம்

முதல் காரணம்

அன்றைய காலத்தில் பள்ளிகூடம் என்பது ஒரே மாதிரியான முறையில் தான் இருந்தது….அதாவது ஆசானின் வீட்டிற்கோ அல்லது ஒரு பொதுவான இடத்திலோ அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறை பேதமின்றி வழங்கப்பட்டது….ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பின் தான் கல்வி முறையில் மாற்றம் நிகழத்தொடங்கியது….அதன் பிறகு தான் நம் மக்களுக்கும் ஆங்கிலத்தின் மீது மோகம் ஏற்பட்டது…அதை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆட்சியை நம்மில் நிலை நாட்ட அவர்கள் எடுத்த ஒரு கருவி தான் அவர்கள் மொழி…..இது ஒரு பெரிய காரணமாக தெரியாவிட்டாலும் இது ஒரு ஆழமான , யாராலும் இன்று புரிந்துக்கொள்ள முடியாத, புரிந்தாலும் அதில் இருந்து மீளமுடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது நிதர்சன உண்மை….இதற்கும் பள்ளிகளின் பிரிவினைக்கும் என்ன காரணம் என்னவென்று உங்களுக்கு தோன்றலாம்….ஆனால் இந்த “ ஆங்கிலமொழி “ தான் மிகப்பெரிய ஆனித்தரமான ஒரு காரணம் நம் இன்றைய அரசுப்பள்ளியின் குறைந்த வளர்ச்சி நிலைமைக்கு….ஆங்கிலம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான் நான் ஒத்துக்கொள்கின்றேன்….ஆனால் அதை கடவுளாக நினைக்கும் அளவிற்க்கு நம் மக்கள் எப்படி தள்ளப்பட்டனர்…வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் , வணிகமும் ஒரு காரணம் எனக்கூறலாம்….அன்று அம்மா என்று பிள்ளைகள் அழைத்தால் பூரிப்பில் அன்னை கட்டி தழுவிய காலம் போய் மம்மி டாடி என்று சொல்லவில்லை என்று பிள்ளைகளை குறை கூறும் அளவிற்க்கு காலம் சென்றுவிட்டது….

இரண்டாம் காரணம்

தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் பாடமுறைகளும் அரசுப்பள்ளியில் நடத்தப்படும் பாடமுறைகளும் ஒப்பிடுகையில் நம் மனம் நம்மை அறியாமலே தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுக்க துடிக்கின்றது….காரணம் அங்கு பிள்ளைகளுக்கு வெறும் புத்தங்கள் வாசித்துக் காட்டப்படவில்லை…..அதை செயல் முறைகளிலும் செய்து எளிதில் பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் கற்பிக்கப்படுகின்றது….அங்கு உள்ள மாணவர்களுக்கு தனி இருக்கை முதல் எல்லாமே தனித்துவமாக இருப்பதால் எல்லோருக்கும் கற்கும் வாய்ப்புக்கிடைக்கின்றது….அதனால் அவர்களது ஆர்வமும் தூண்டப்படுகின்றது…. தனியார் முறை கல்வியில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது…

ஆனால் இன்றும் சில அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் ஆசானுக்காக வருடம் முழுக்க காத்திருக்கும் நிலை உள்ளது…..இங்கு வெறும் புத்தகங்கள் வாசிப்பிலே காலங்கள் நகர்கின்றன……செயல்முறை விளக்கம் பற்றி அங்கு உள்ள மாணவர்கள் அறியவில்லை என்று கூறவே மனம் வேதனை அடைகின்றது….இங்கு தனித்துவம் இல்லை….ஒருப் பொருளை பலப் பேர் பங்கிட்டு கற்கவேண்டியுள்ளது…… இதனால் இங்கு பயிலும் மாணவர்களின் சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை….அதற்கு உதாரணமாக

உதாரணம்

தண்ணீரின் அறிவியல் குறியீடு (H2O) என்று சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நீராவியின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்கப்படும் பொழுது, மாணவர்கள் கேள்வி கேட்ட ஆசிரியரை கோபித்து கொள்ள கூடும். காரணம், தண்ணீருக்கு சொல்லிக் கொடுத்தார்களே அன்றி நீராவிக்கு என்ன குறியீடு வரும் என்பதை சொல்லித் தரவில்லையென்பார்கள். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல் தர்க்கரீதியாக (logical) சிந்திக்கும் திறமை நமது கல்விமுறையில் இல்லை என்பதே நமது வருத்தம். (நீராவி தண்ணீரிலிருந்து ஆவியாவது என்பதனால் அதற்கும் H2O) தான்).


பிழை யார் மீது

நாம் மேலே இரண்டு காரணங்களை பார்த்தோம்….இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் பிழை யாருடையது….பெற்றோர்களா????? நிச்சயம் இல்லை….. தன் பிள்ளைகளின் சிந்தனைகள் தூண்டப்பட்டு நல்ல முறையில் கற்கவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்….அதனால் தான் இரவும் , பகலும் பாராது தன் பிள்ளைகளின் கல்விக்காக ஒடாய் தேய்கின்றனர்….பிற்காலத்தில் அவர்களாவது தன்னைப்போல் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் தான் தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர்…..உண்மையில் பிழை நம் அரசுக்கல்வி முறையில் உள்ளது….தனியார் பள்ளிகளைப்போல் அரசுப்பள்ளியிலும் பாடம் கற்பிக்கப்பட்டால் நம் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை தேர்வு செய்ய போகின்றனர்???? ஏன் கல்வி அமைச்சராய் இருப்பவரின் பிள்ளைகள் கூட அரசுப்பள்ளியில் பயிலவில்லை என்பது நிதர்சன உண்மை… காரணம் அரசுப்பள்ளியின் கல்விதரம் சரியில்லை என்பது அவர்களுக்கே தெரியும்…அதை சரி செய்யவேண்டியவர்கள் எல்லாம் மெளனம் காப்பது ஏனோ விளங்கவில்லை…..பணம் திண்ணி முதலைகளுக்கு அரசுப்பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு குட்டி ஐன்ஸ்டீனையும்,ஒவ்வொரு கல்பனா சாவ்லாவையும் பற்றிக் கவலைப்பட நேரம் இல்லைப் போலும் இந்த அரசியல் என்னும் போலிச் சாக்கடையில்…..

அரசுப்பள்ளியின் தரம் உயர்த்த

• முதலில் செயல்முறை விளக்கத்துடன் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும்…..
• மாணவர்களின் திறன்களை வளர்க்க அரசு ஒவ்வொருக்குழந்தையின் திறமையை ஆராய்ந்து அவர்களை ஊக்குவிக்கும் முறையில் பண உதவி அதிக அளவில் செய்யவேண்டும்….
• பாடங்களுடன் மட்டும் இல்லாமல் பிற நாட்டு மொழிகளும் அவர்களின் கலாச்சாரங்களும் கற்பிக்கபட வேண்டும்….
• ஒவ்வொரு வகுப்பறைகளும் வெறும் புத்தகங்களும் மேஜைகளும் நிரம்பிய இடமாக இல்லாமல் மாணவர்களின் கற்பனைத்திறனை தூண்டும் விதமாக புத்தக தகவல்களை வண்ண ஒவியங்களாக சுவற்றிலும் செயல்முறைகளில் அவர்களே செய்து புரிந்துக்கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனியாக இருக்கவேண்டும்…
• நம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் நம் கலாச்சாரங்கள் பற்றியும் கதைகளாகவும் முடிந்தால் அவைகளை படங்களாக போட்டுக் காண்பித்தால் நன்கு பதியும்…
• கரும்பலகை கல்வியாக மட்டும் இல்லாமல் சற்று தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி வடிவிலான முறைகளைப் பின் பற்ற வேண்டும்….
• மாணவர்களுக்கு மனம் ரீதியான பிரச்சனை இருக்கிறதா என்று அவ்வபோது ஆய்வு கொள்ளவேண்டும்…
• புத்தகங்களில் படிக்கும் தகவலை நேரடியாக பல இடங்களுக்கு கூட்டிச்சென்று காண்பிக்கவேண்டும்….அதில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்டதை அவர்களிடம் கேட்டு ஆய்வு செய்யவேண்டும்…
• படிப்போடு இல்லாமல் விளையாட்டுகளிலும் மாணவர்களை நன்கு ஊக்குவிக்க வேண்டும்…
• அரசு ஆசிரியர்களுக்கு தனியார் ஆசிரியர்களுக்கு நிகராக அவ்வபோது பயிற்சி அளிக்கப்பட வேண்டும் காலத்தின் மாற்றத்திற்க்கு ஏற்ப…..

இவைகளை எல்லாம் நிச்சயம் நடைமுறைப்படுத்தினால் அரசுப்பள்ளியில் தரம் உயர்வது மட்டும் இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்…..அதன் பிறகு தனியார் பள்ளியின் முக்கியத்துவம் குறையும்…….பெற்றோர்களும் தங்கள் பணத்தை விரயம் செய்யமாட்டார்கள் ……..

முடிவுரை

மேற்சொன்ன முறைகளை அரசு மேற்கொண்டால் நிச்சயம் இன்றைய நிலை மாறுவது மட்டும் இல்லாமல் இன்றைய குழந்தைகளுக்கு பணச்சந்தைகளாக தெரியும் பள்ளிக்கூடங்கள் நாளை கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கோவிலாக தெரியும்…..கல்வி என்பது பொருள் ஈட்ட மட்டுமே என்ற எண்ணாம் போய் அறிவை வளர்கத்தான் என்பதை புரிந்துக்கொள்வார்கள் நம் வருங்கால தலைமுறையினர்……அதற்கான நாட்களின் ஆவலோடு நான் காத்திருக்கின்றேன்….இப்படி ஒரு நல்ல தலைப்பில் கட்டுரை எழுத வாய்ப்பு தந்த அகன் ஐயாவிற்க்கு நன்றி……..

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (7-Jul-14, 1:28 pm)
பார்வை : 1061

சிறந்த கட்டுரைகள்

மேலே