உலகம் உன்கீழ் படியும்

இன்னும் எதற்கடா உறக்கம் - உன்
கண்ணில் சூரியன் பிறக்கும் - நீ
---------------நிமிர்ந்து பார்த்தால்
---------------இமயம் கூட
நெற்றிக் கண்ணைத் திறக்கும் !
வானில் ஏறி நிலவை - பூந்
தேனில் செய்யடா சலவை - உன்
---------------வீரம் இன்று
---------------வெளியே தெரிய
வியர்வைக் காட்டும் அளவை !
புயலைக் கையில் பிடித்து - அதை
பயப்பட வையடா அடித்து -உன்
---------------துணிவைக் கண்டு
---------------வெடிகள் கூட
வெடிக்கும் கண்ணீர் வடித்து !
சின்ன தோல்விகள் வரலாம் - அதை
வென்றால் நன்மை பெறலாம் - நீ
---------------உழைத்து நின்றால்
---------------உலகில் ஓர்நாள்
உன்பேர் சொல்லப் படலாம் !
குறுகிய எல்லையை விட்டு - நீரை
பருகு முகிலைத் தொட்டு - அந்த
---------------மழையை அனுப்பி
---------------பாலைவனத்தில்
தண்ணீர் மாளிகைக் கட்டு !
எதையும் செய்யடா துணிந்து - உன்முன்
எதுவும் நிற்கும் பணிந்து - சிறு
---------------விதையின் வீரியம்
---------------உனக்குள் கொண்டு
புவியில் நில்லடா நிமிர்ந்து !
மலரின் குவிப்பு மாலை - பெரு
மணலின் குவிப்பு பாலை - அந்த
---------------மணலை எல்லாம்
---------------மலராய் இன்று
மாற்றுவதே உன் வேலை !
கடலும் உன்முன் நடுங்கும் - உன்
பிடியில் அலைகளும் அடங்கும் - நீ
---------------முயற்சி செய்தால்
---------------செவ்வாய்க் கோளில்
தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும் !
வெற்றியின் சிறகை விரித்து - வானை
முற்றுகை இடு நீ மறைத்து - அட உன்
---------------உயிரைக் குடிக்கும்
---------------கோழைத் தனத்தை
உதறித் தள்ளடா எரித்து !
உன்னால் எதுவும் முடியும் - இரவும்
உன்னைக் கேட்டே விடியும் - நீ
---------------விதியை எதிர்க்கும்
---------------வல்லமை கொண்டால்
உலகம் உன்கீழ் படியும் !