மழலை
முகத்திற்கு முன் ஒன்றும்
முதுகிற்கு பின் ஒன்றும்
அறியாத ஒன்றன்றோ - உன்
அற்புத பொன் சிரிப்பு
கண் அருகில் காணும்
காட்சிகள் அறிகிலர் ஆரும்
கல்லில் ஊரும் எறும்பை
கவி தோற்க இரசிக்கும் - உன்
கருவிழிகள் இரண்டும்
உன் திசை இருப்போர்கெல்லாம்
அன்பு இசை கொண்டோர்க்கெல்லாம்
வன் பசி போகுமல்லோ - உன்
வளர்மிகு கன்னம் காண
குட்டி நாயுடனே குட்டி கதை பேசுவாய்
கள்ள காக்கையுடனே கண்ணாமுச்சி ஆடுவாய்
காரணமின்றியே காற்றுடன் காதல் கொள்வாய்
கண்களை சிமிட்டியே கல்லுளம் கரைத்திடுவாய்
எழுத்திலா மொழிகளிலே
உன் மொழி சிறந்து தன்றோ
கடவுளுக்கும் ஆசைவரும் - உன்
மழலை மொழி கற்பதற்கே