இன்னொரு கவிதை - கடுதாசி இன்னும்வரக் காணலியே மச்சான்

உன்ன சுமந்து நெஞ்சுக்குள்ள
ஆசமூட்ட கட்டி வெச்சேன்
உன்ன பார்த்த நிமிசத்துல
அதனையும் சிதற விட்டேன் !

எங்கிருந்து வந்தாயோ ?
எதைத்திருடி போனாயோ ?
கையேந்தி நிக்காம
தவமிருக்க வைத்தாயோ ?

மயங்கிபுட்டேன் உன் நெனப்பில்
மறச்சுபுட்டேன் அதச் சிரிப்பில்
தவிக்கவிட்டே ஏன் போனாய்
தாங்குவேனோ உன் பிரிவில் ?

கடுதாசி இன்னும் வரக்
காணலியே ஆச மச்சான் !

போய் சேர்ந்த தகவலில்ல
போன கத சொல்லவில்ல
பொய்பேசும் உண்மைக் காதல்
இன்னும் உனக்கு புரியவில்ல !

நான் தவிக்கும் தவிப்புகுள்ள
உன் நெஞ்சு உருகலையோ ?
என் மோகம் தான் தீர்க்க
நீயும் ஒன்னும் எழுதலையோ ?

கடுதாசி இன்னும் வரக்
காணலியே ஆச மச்சான் !

யார் யாரு சுகமுன்னு
நீ கேக்க வேணாமே !
நீயும் நானும் நலமுன்னு
சொன்னாக் கூட போதுமே !

நீ தொட்ட பேனா மை
நான் தொட்டு பாப்பேனே !
நீர் சொட்ட அது உருகும்
என் தாவணியில் தொடப்பேனே !

கண்பூத்து காத்திருப்பேன்
என்னாச மச்சானே
கடுதாசி இன்னும் வரக்
காணலியே ஆச மச்சானே !

________________________________________________________________________________________________
இந்தக் கவிதை எனது மாமாவின் வருங்கால மனைவியாகப் போகும் எனது மாமி எழுதியது அவர்களிடம் நான் இந்தத் தலைப்பைத் தந்ததும் எழுதிக் கொடுத்தது நண்பர்கள் உங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் .

எழுதியவர் : ராஜா ராஜேஸ்வரி (31-Aug-14, 11:28 am)
பார்வை : 128

மேலே