புலம்புகிறது ஒரு தோல்வி

மொழுகுவர்த்திகளோடு நானும்
அழும் இந்த அந்தகாரத்தில்
காகிதத்தில் விழும் - என்
கண்ணீர் சொட்டு...

இதய வலிகளின் மொழி
இங்கே கண்ணீராக...

நான் அழுகின்றேன் இன்று
தினம் தினம் என்னை
தீண்டிய தோல்விகளால்
தோற்று போகுமோ - என்
வெற்றி,
வெற்றி தான் தற்காலிகமா?
அல்லது,
தோல்வி தான் தற்காலிகமா?
இல்லை
மாறும் உலகில்
இரண்டுமே மாற்றங்கள் தானா?

கண்ணீரும் கலங்கும்
என் சோகம் தாங்காமல்...
ஆறுதல் வார்த்தைகள் கூட
அழுதுவிட்டு போகும்
என் இதய மொழி கேட்டால்...

நான் ஏமாந்தேனா?
இல்லை - என்
நம்பிக்கை கூட என்னை
ஏமாற்றி விட்டதா?
புரியவில்லை எனக்கு
புண்ணாகி போனது மனது...

இறந்த பின் வாழ்வா என்ற
விவாதமே வேண்டாம்
இறந்துகொண்டே
வாழ்கிறது என் உயிர்...

கிராமத்து ஓடையில் விட்ட
காகித கப்பலை கடலில்
தேடும் சிறுவனாய்
தொலைந்த - என்
நிம்மதியை நிஜங்களில்
தேடுகிறேன் நான்...

அடிக்கடி அழும்
கண்கள் வேண்டாம்
இறைவா...!
புன்னகையால்
அணைத்துக்கொள்ளும்
இதழ்கள் கொடு...

எழுதியவர் : ஹானா (14-Sep-14, 10:53 pm)
பார்வை : 160

மேலே