இயற்கையின் இசையில் …
புல்வெளி , மரநிழல் , அருகே ஏரி ,
இயற்கையின் இசையன்றி , ஓசை ஏதும் இன்றி !
அங்கே …
அணில்கள் இரண்டு கண் எதிரே ,
ஆரவாரமின்றி ஒரு ஓட்டம்
ஒன்றை பின்தொடர்ந்து மற்ற ஒன்றுமே
ஒருவேளை விளையாட்டோ?
இடை இடை ஒரு நிறுத்தம் ,
முதல் ஓடுபவள் நின்று கொறிக்கிறாள் எதையோ,
பின்தொடர்பவனும் அவளை அடைந்து பிடுங்குகிறான் அதையே !
மீண்டும் ஒரு ஓட்டம் ,
இம்முறை நிறுத்தம் வெவ்வேறு இடங்களில்,
கொறிப்பதும் வெவ்வேறாய் !
காலம் கழிகிறது ,
மீண்டும் ஓட்டம் ,..
அவை இரண்டும் சேர்ந்து இப்பொழுது !
வளி மென்மையாய் வருட ,
வேந்தன் அவனும் அருகே அமர ,
கண்களில் பட்ட இக்காட்சிகளும் தித்திப்பாய் ,
அணில்களாய் எம்மை உருவகப்படுத்தியே!
செடிகள் பல அருகருகே ,
செல்லமாய் அவைகளும் உறவாடியே.
சிரிப்பது பூக்கள் மட்டும் தானா?
திரும்பி பார்த்தேன் ,
என்னுடன் சேர்ந்து என்னவனுமே !
மேலும் நடக்க ,
ஊஞ்சல் இரண்டு கண்ணெதிரே ,
அசைவின்றி நிசப்தத்தில் சம்பாஷனை போலும் அவைகளுக்குள்ளே !
சற்றே சீண்டி பார்க்கலாம் அவைகளை , வா என்றேன் என்னவனிடம் !
பண்பில் சிறந்தவனாம் , அவற்றின் அந்தரங்கம் கெடுக்கமாட்டானாம்!
இவ்வாறே ..
கால்களின் நடை தொடர ,
மனங்களின் நடனம் தொடர ,
பயணமும் தொடர்ந்தது ,
எதிர்காலம் எதிர்நோக்கியே !