என் குளத்தில் சில முத்துக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

என் குளத்தில் சில முத்துக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,
சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று .
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து மாலை வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி .
ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .