இடையில் கலைந்த கனவுகள்

சீழ் கசியும் சிநேகத்தின் மத்தியில்
சிரிக்க முயன்று தோற்றுப் போன
உண்மையான நட்பின்
உணர்வற்ற நிலையாய்....
பாதரசம் நழுவும் வார்த்தைகளால்
பாதம் வரை நனைந்து
மிச்சம் வைக்காமல் மென்று முடித்த
வறட்சி மிகுந்த நாவில்
மிரட்சி கொண்டு
ஓரமாய் ஒதுங்கி நிற்கும்
ஒற்றைச் சொல்லாய்...
விஷத்தை விழுங்கியும்
கசப்பென்று காட்டிக் கொள்ளாத
கசாப்புக் கடைக் களவு கோழிகளாய்...
மூடியிருந்த முட்டைக்குள்
காப்பாற்ற முடியாத கருச்சிதைவைக்
கண்டு கொள்ளாமல்
வெளியே நின்று வேடிக்கைப் பார்க்கும்
வெள்ளை ஓடுகளாய்...
அதிகாலையில் பாடும்
ஆவிகளின் கூப்பாட்டில்
ஆரிரோ தாலாட்டில்
அர்த்தம் தேடும்
அர்த்தமற்ற ஆலாபனையாய்...
பாம்பின் வழித் தடங்களை
புற்றுக்கு வெளியேயும் உள்ளேயும்
தேடித் திரியும்
கொத்திய இடத்தின் ரத்தத் துளிகளாய்...
உரக்க கத்தியும்
ஊருக்கே கேக்காத
ஊமை ஒப்பாரியின்
ஓசையற்ற விசும்பலாய்...
கவிதைக்கு உயிர் கொடுக்க
கருவறைக் கழிவுகளை
காகிதத்தில் பரப்பிய
முட்டாள் கவிஞனின்
மூட நம்பிக்கையாய்....
கனவு கலைகிறது...
கவிதை முடிகிறது...