யாரிந்த மலையகத் தமிழர் - கே-எஸ்-கலை

தோழர் ராம் வசந்த் அவர்களுடன் உண்டான ஒரு கருத்துப் பரிவர்த்தனையில் அவரால் கேட்கப் பட்ட மலையக தமிழர் குறித்த தகவல்களை வழங்கும் நோக்கில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
மலையகம் என்பது இலங்கைத் தீவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தைக் குறிக்கின்றது.
புவியியல் அமைப்புகளின் படி இலங்கையில் மிக அழகான அரிதான இயற்கை வளங்களையுடைய பிரதேசங்கள் மலையகத்தில் தான் உள்ளன. குறிப்பாக நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், மலைத்தொடர்கள், குன்றுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இலங்கையின் இதர பிரதேசங்களைவிட மாறுபட்ட காலநிலை வானிலை நிலைமைகளை கொண்டமைந்த இந்த மலையகப் பகுதி குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சொர்க்கபுரியாவும் இருக்கின்றமை குறிப்பிடத் தக்க விடயங்கள். குறிப்பாக நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகள் இதில் முன்னிலை வகிக்கின்றன.
மலையகம் குறித்து ஒரு துளி அளவிலான விவரிப்பே மேலுள்ளது. நாம் கதைக்க எடுத்துக் கொண்ட விடயமான “மலையக தமிழர் யார்” என்ற தொனிப்பொருளின் கீழ் இனி நகர்கிறேன்.
"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" என்போர் குறிப்பாக இலங்கையின் மத்தியப் பிரதேசமான மலைப்பிரதேசங்களில் பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களை குறிக்கும்.
மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும்.
இருப்பினும் இந்த "மலையகத் தமிழர்" எனும் பதத்திற்குள் தமிழரல்லாத தெலுங்கர், மலையாளியினரும் அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர்.
ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்றநிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது. இந்த பின்னடைவு, விதிவிலக்காக ஒருசிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர். (ஆதாரம் - விக்கிப்பீடியா)
அரசியல் ரீதியில் பல போராட்டங்களைக் கண்ட பின்னர் தான் மலையக தமிழருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்க விடயமாக இருகின்றது. மலையக தமிழர் குறித்த அரசியல் மேற்கோள்களை விரிவாக பேசுவது என்பது கொஞ்சம் கடினமான விடயம். மேலோட்டமாக குறிப்பிட்டுச் செல்கிறேன்.
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இந்த தோட்டத் தொழிலார்கள் தான் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது. ஆடை தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் செலாவணி தற்போது படிப்படியாக அதிகரித்து வந்தாலும் தேயிலை மூலமான அந்நிய செலாவணியே இலங்கையின் பிரதான பொருளாதார மூலவளமாக இருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த பொருளாதார மூலசக்தியாக இருக்கும் மலையக தமிழர்களை இலங்கை அரசாங்கம் பெரும்பாலும் புறக்கணித்தே நடாத்துகின்றது. மலையக தமிழர்களின் வாழ்வியல் ஒரு நூற்றாண்டு முந்திய சமூகத்தினரின் வாழ்வியலை சாயலாக கொண்டு தான் இன்னும் இருக்கின்றது.
உணவு, உறையுள், உடை என்ற அடிப்படை வசதிகளைக் கூட நேர்த்தியாக பூர்த்தி செய்துக் கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே மலையக தொழிலாளிகளின் வருமான நிலைமை இருக்கின்றது.
“லயம்” என்று சொல்லப் படும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத குடியிருப்புகளே இன்னும் இவர்களின் வாழ்விடங்களாக இருக்கின்றது. என்னுடைய “இது தோட்டக்காட்டான் கதை” என்ற படைப்பில் இணைத்திருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். அதிலிருப்பதே மலையக தொழிலாளிகளின் வாழ்விடங்கள்.
மிகவும் குறுகிய பரப்பளவுகளைக் கொண்ட அறைகளில் மொத்த குடும்பமும் சுருண்டுக் கிடக்கும் பரிதாப நிலையை எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது என்பது திண்ணம்.
வதிவிடங்கள் மட்டுமின்றி அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு சரியாக இருப்பதில்லை. குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி உட்பட முக்கிய உட்கட்டுமான வசதிகள் எதுவும் இங்கு சீராய் இருப்பதில்லை.
முறையான வருமான நிலைகள் இல்லாத காரணத்தால் இங்குள்ள இளம் தலைமுறையினர் கல்வியை இடைவிலகல் செய்து தலைநகர் கொழும்பு உட்பட பிரபல வர்த்தக நகரங்களை நோக்கி நகர்வதும். அங்கே கிடைத்த வேலையை செய்து நாள் செலவைத் தேடிக் கொள்வதும் பெரும்பான்மை வாடிக்கையாகிவிட்டது.
நேர்த்தியான வழிகாட்டல் இல்லாத காரணத்தால் இவர்கள் பல வேளைகளில் முறையற்ற வாழ்வியலுக்கும், மூர்கத்தனமான பண்பாட்டிற்கும் தள்ளப் படுகின்றார்கள். குடிபோதைக்கு அடிமையாதல், ஒழுக்கயீன செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றன குறிப்பிட்டாக வேண்டிய விடயங்களாகவே இருகின்றன..
இப்படியான இன்னல்கள் எத்தனையோ இருந்தாலும் முறையாக கல்வி பயின்று முத்திரைப் பதித்த பலரும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். பல கல்விமான்கள், புத்திஜீவிகள், சிந்தனைவாதிகள் இந்த மலையகத்தில் பிறந்து வாழ்ந்து மலையகத்திற்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயமே !
அதேபோல பல மலையக இளைஞர்கள் மலையகத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உழைப்பதும், வர்த்தக நகரங்களில் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் முனைப்பில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் மலையகத்தின் வாழ்வாதார பயிர்ச் செய்கைகள் பெரியளவு பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
இந்த தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பது தமிழ்நாட்டிற்கே தெரியாமல் இருகின்றது என்பதை எண்ணி வருத்தம் கொள்கிறேன். யுத்தத்தை அடிப்படையாக வைத்து தமிழர் விடுதலை சூளுரைகளை விதைக்கும் தமிழ்நாட்டு அரசியல் பிரபலங்களின் வாயில் மலையக தமிழர் குறித்த எந்தவிதமான எண்ணங்களையும் இதுவரை நான் கேட்டதில்லை.
ஈழ தமிழர் பிரச்சினை வேறு, மலையக தமிழர் பிரச்சினை வேறு என்பதை அறிந்தவர் எவரும் உளரோ அறியேன். உண்மையான தமிழர் ஐக்கியத்தை விரும்பியிருப்பின் நிச்சயம் இவர்கள் இந்த மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் எவ்வளவோ பேசியிருக்க வேண்டும்.
அலறிக் கொண்டே சாகின்றவனை பார்த்துக் கதறும் உலகம் அழுவதற்கு கூட தெம்பில்லாமல் ஊமையாய் மரித்துக் கொண்டிருக்கும் இந்த மலையக சமூகத்தைப் பற்றிய எந்தவிதமான கரிசனையும் இல்லாமல் இருப்பது ஆற்றாமையாகின்றது !
இங்கே நான் மலையக தமிழ் அரசியல்வாதிகள் குறித்து எதனையும் எழுத விழையவில்லை. காரணத்தை புரிந்துக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன் ! (எழுதுவதற்கு துளியும் பயமில்லை....எதுவுமே இல்லை எழுதுவதற்கு)
மலையக தமிழர்கள் குறித்து இன்னும் விரிவாக பேசுவதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் அமையும். அதன்போது இன்னும் விளக்கமாகவும் விரிவாகவும் பேசுகிறேன்.
இந்த கட்டுரைய எழுத காரணமாக இருந்த திரு.ராம்வசந்த் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-கே.எஸ்.கலைஞானகுமார்-
-பதுளை-