உன்னை நீயே உருவாக்கு உன்னத சமுதாயத்தின் கருவாகு

தாய் தந்தையரின் தயையினால் உடல் உருவாவதும் உயிர் திருவாவதும் இயற்கை தந்த வரம். இப்பெரும் வரத்தினால் பிறந்தோம், பிற சூழ்நிலைகளின் அரவணைப்பில் வளர்ந்தோம். ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்றிராமல் நாம் எதையாவது செய்துவிட்டுப் போகலாமே!

எதையாவது செய்வதென்றால் யோசித்துப் பாருங்கள்! இவ்வுலகில் புதிதாக எதையேனும் செய்யவியலுமா? நாம் செயல் செய்ய எவ்வாறு கற்றோம்? எவரையேனும் பார்த்து, செயல் புரிவதைப் பார்த்து அதைப் போலச் செய்யக் கற்றோம்.

குழந்தைப் பருவத்திலிருந்து வளர வளர நாம் பார்க்கும், பார்த்த சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இவற்றால் நம்மையும் அறியாமல் அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். நாம் பார்த்திராத, இதுவரைக் கேட்டிராத செய்திகளைப் பற்றி நாம் அறியமாட்டோம். முற்றிலும் புதிதான ஒரு செய்தி என்றால் நிச்சயம் நாம் யோசிப்போம்!

சிந்தித்துப் பாருங்கள்! இந்த உலகம் ஒன்றுதான். இதில் அவரவர் பிறக்கக்கூடிய இடம், காலம், வசதிகள், இயற்கை அமைவு, சூழ்நிலை போன்றவற்றின் தூண்டுதலுக்கு ஏற்ப எண்ணங்கள் மற்றும் செயல்கள் அமைகின்றன.

இவ்வேறுபாட்டினால் பல்வேறு வகையான மனிதர்கள் உருவாகின்றனர். உண்மையில் சொல்லப் போனால் உலகம் உன்னை உருவாக்குவதில்லை. உனக்கேற்ற உலகத்தினை நீயே உருவாக்குகின்றாய்!

சிலரால் இதை ஏற்கமுடியாது. அவர்கள் தனக்கு ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தன்னையன்றி பிறரைக் காரணமாக்கக் கூடிய மனப்பான்மை உள்ளவர்கள். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமே பொறுப்பல்லவா? “நன்மையும் தீமையும் பிறர் தர வாரா” என்பது முதுமொழி அல்லவா! அதுவே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மையுமாகும்.

யோசித்துப் பாருங்கள்! நம்மை நாம் உருவாக்குகிறோமா இல்லை சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் நம்மை உருவாக்குகின்றனவா? மேலோட்டமாகப் பார்த்தால் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் தான் நம்மை உருவாக்குவதாகத் தோன்றும். இல்லவே இல்லை, ஒரு விழிப்புணர்வோடு ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள்! நம்மை நாம் தான் உருவாக்குகிறோம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது வள்ளுவன் வாக்கு.

இவ்வுலகில் நமக்கு உடல், உயிர் தந்து உயர்வான அனைத்து உணர்வுகளும் தரப்பட்டுள்ளன. நாம் ஒரு காலிப் பையினைப் போல இலேசாக இருக்கிறோம். நாம் எதனை விரும்புகிறோமோ அதனை எடுத்து நம்முள் திணித்துக் கொள்கிறோம். நம்மை நாமே இத்தகையவன் என அடையாளம் காட்டுகிறோம். நம்மை விமர்சிப்பது நமது மனமே. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் செயலாற்றுவோம்.

என் எண்ணத்தில் நான் நல்லவன் என ஊறிப் போகிறது என வைத்துக்கொள்ளுங்கள்! என் மனம் என்ன சிந்திக்கும்? எதனைச் செய்தால் நல்லவன் எனப்படுவோம், நல்லவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென நான் நினைக்கிறேனோ அதனைப் போலவே நான் செயலாற்றுவேன். ஏனென்றால் என்னை நான் நல்லவன் என அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

அதனைப் போல தான் நல்ல உணர்வுகளையும் எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டு உன்னை நீயே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

“நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகின்றாய்! நீ அதுவாகு!” என்பது வேதத்தின் சாரமன்றோ?

உன்னை நீ உணர்ந்த நொடியிலேயே திருத்திக் கொள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு முன்னேறப் பார். பிறர் நம்மை எப்படி நடத்தவேண்டுமென நாம் உணர்கிறோமோ அப்படியே நாம் பிறரை நடத்தவேண்டும்.

கொடுத்துப் பெறுவது மரியாதை மட்டுமல்ல, மனமகிழ்வையும் தான். இது வரை உலகில் நீ உணர்ந்த அனுபவ அறிவு உனக்குள்ளே பல பதிவுகளாக உள்ளன. இன்னும் சிறப்பாக இப்பிறவியைக் கடக்க உள்ளுணர்வின் உந்துதலோடு உன்னை நீயே உருவாக்கு! நன்மையும் தீமையும், வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைதான். நம் மனத்தின் போக்கினைக் கட்டுப்படுத்தப் பழகிவிட்டால் எல்லாமே நமக்கு இனிமையானதாகி விடும். நீ உன்னை உணர்ந்து உன் வசமாகி விட்டால் உலகம் நொடியில் உன் வசமாகி விடும். எனவே உன்னை நீயே உருவாக்கு! உன்னத சமுதாயத்தின் கருவாகு!!

எழுதியவர் : முருக.கவி (7-Nov-14, 12:26 pm)
சேர்த்தது : மு. கவிதாராணி
பார்வை : 309

மேலே