உணர்த்திடுங்கள் உயர்வான நம்பண்பினை

அன்னியன் நம்மை ஆண்ட காலத்திலே
காத்து நின்றனர் நம்கலாசார நிலையை - அன்று !
அயல்நாட்டு நாகரீகம் தொற்றிய தாலே
இந்திய கலாசாரமோ பற்றி எரிகிறது - இன்று !

அன்பின் அரங்கேற்றம் பன்முக வழியில்
அழகாய் வெளியே தெரியும் பண்போடு - அன்று !
அலங்கோல நிலையே நடை போடுது
கலங்கிய மனங்கள் தவித்து நிற்குது - இன்று !

பழங்கால கதைபேசி குழப்பவில்லை
பழக்க வழக்கமும் தடம் மாறுகிறதே !
வருங்கால தலைமுறை வளமோடு
வாழ்ந்திடவே வருந்துகிறேன் நானும் !

விஞ்ஞான வளர்ச்சி ஓங்கிடும் காலத்தில்
அஞ்ஞானமோ அணை உடைத்து ஓடுது !
வளர்ந்திடும் நாகரீகத்தின் பரிணா மமென
வரிந்து கட்டுகின்றனர் இளைஞர்கள் இதற்கு !

எதிர்காலம் நினைத்து ஏங்குது உள்ளமும்
உதிர்காலம் நெருங்கும் இந்த வேளையில் !
கலியுகம் என்கிறார் வலிதனை உணராதோர்
பலியுகம் என்கிறார் பண்பாடு உணர்ந்தோர் !

அரைகுறை ஆடை யணிவதே நாகரீகமாம்
குறைநிறை அறிந்திடா குலமகள் ராதைகள் !
அணிகலன் அணிந்திடா மேனியே அழகாம்
அழகில்லை என்றால் அறிவில்லை நமக்காம் !

உரைத்திடுங்கள் மக்களுக்கு உண்மைதனை
உணர்த்திடுங்கள் உயர்வான நம்பண்பினை !
உலகோடு ஒத்துவாழ் சொல்வதும் கேட்கிறது
உள்ளமது வலிக்கவே உரைத்தேன் நானும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Nov-14, 9:39 am)
பார்வை : 159

மேலே