மரங்கள் மண்ணின்வரங்கள்
மரங்கள் ...
ஆகாய அன்னையை
ஆரத்தழுவ
ஆயிரமாயிரமாய்
எழுந்து நிற்கும்
மண்ணின் கரங்களா ?
விண்ணக அன்னைக்கு
மண்ணகம் வீசும்
சாமரங்களா
பூமரங்கள் ...?
பூமிமகள்
எப்போதும்
எடுத்து உடுத்தும்
பச்சைப் பட்டாடையா
இச்சைஊட்டும்
பச்சைமரங்கள்... ?
தென்றலும் புயலும்
திவ்வியமாய்ஆட
பூமி
அமைத்துக்கொடுத்த
அழகரங்கம்தானா
ஆடிநிற்கும் மரங்கள்... ?
காலம்காலமாய்
வானம்பாடிகளாய்
காற்றுப் பாடல்
பாடிக்கொண்டிருக்கும்
கானம்பாடிகளா
கவினுறும் மரங்கள்...?
ஞாலமெங்கும்
காலம்தோறும்
தவமாய் தவமிருந்து
வண்ண மழையை
வருவித்துத் தரும்
தவப் பிறவிகளே
தளிர் மரங்கள் .....!
மரங்கள் ...
மண்ணின் வரங்கள் !
***** ***** ***** *****