அப்பாவின் பேய் கதைகள்

சிறுபராயம் முதல் எனக்கு
கதைகளில் கொள்ளை பிரியம் என்பதால்
எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினை
சொல்லிக்கொண்டிருப்பார்

முதலில் பயங்காட்டுவதாய் வரும்
“பேய்”கதையில் தொடங்கி
அரச கதை,பின்-நரிக்கதை
சிங்கம்,புலிக்கதை,”கிரீஸ்”மனிதன் கதை
மொழிகடந்த தெருக்கதைகள் என
அது ஓவ்வொன்றும்
நீண்ட கதைகளால் ஆன கதைகள்
அவற்றை கேட்க
இனிமையாகவும்,சுவரஷ்யமாகவும்,
பயங்கரமானதாகவும் இருந்தன
கற்பனையில் கதைகளை
கட்டிச் சமைத்து கதைப்பது கேட்க
அப்போது பிடித்தமானதாய் இருந்தது
ஆனால்;பின்வந்த காலங்களில்
அப்பாவின் கதைகள்
சப்பையாகவும்,குப்பையாகவும்
சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க
பொய்க்கு கூட பொருந்தவுமில்லை
எனக்கு புத்தி பிடிபட்ட விடையம்
அப்பாவுக்கு பிடிபடாமல் இருந்திருக்கலாம்


அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
என்பதற்காக
எல்லாக் கதைகளையும்
கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?
இன்றும் அப்படித்தான்
அப்பா கதை சொல்ல தொடங்கினார்
குறுக்கிட்ட நான்
அப்பாவிடம் சொன்னேன்


“இது எனது முறை”
நான் ஒரு கதை சொல்கிறேன் என்று
அப்பா காதுகளை கூர்மையாக்கினார்
என் கதை கேட்க
நான் சொன்னேன்
அப்பாவுக்குரிய மரியாதையுடன்
நீங்கள் ஓய்வெடுங்கள் என்று.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (26-Nov-14, 11:39 pm)
பார்வை : 116

மேலே