நல்ல மனதினை தேடும் பயணம்

மலர்களுக்கெல்லாம் நல்ல
மணம் வைத்த இறைவன்
மனிதனுக்கு நல்ல மனம் வைக்க
மறந்து விட்டான் .

திருமணம் என்ற
பந்தத்திற்கு
வரதட்சணை எனும்
கொடுமையை படைத்து
விட்டான் .

உன் அழகிய படைப்புகளில்
அபூர்வத்தை ரசித்த நான்
உன் அலட்சிய படைப்பால்
சினத்துக்கொண்டேன்.

லட்சம் லட்சமாய் வரதட்சணை
வேண்டுமாம்
புருஷ லட்சணம் அற்றவன்
புருசனாய் மாற .

பெண்ணையும் பொன்னையும்
பெற்றுவிட்டு
தாலி கட்டிய தரம்கெட்டவன்
வீட்டில்

சம்பளம் இல்லா சமையற்காரியாய்
கட்டணமில்லா சலவைத் தொழிலாளியாய்
பணம் பெறாத பணிப்பெண்ணாய்
பகலிரவு பாராமல் வீட்டுப்பணி செய்து

பாசம் காட்ட எவருமின்றி
பரிந்து பேச உறவுமின்றி
பத்தினி படும் துயரம்
உன் படைப்பில் ஒரு பகுதி என்று
பார்த்ததால் புரிந்துகொண்டேன்

ரசிக்க வைக்கும் உன் படைப்பு
அருவெறுக்க வைப்பதால்
நல்ல மனம் உள்ள மனிதரை
நாடியே பயணம் பயணம் தொடர்கின்றேன் .

எழுதியவர் : கயல்விழி (24-Dec-14, 3:48 pm)
பார்வை : 118

மேலே