நாளும் கோளும் காதலில்

திங்களின் அழகைக் கண்டு
தீராத காதல் கொண்டு
சந்திரபுரம் தேடி நகர்தன
கால்கள் அன்று

செவ்வாய் திறவாய்
கனிவாய் மலர்வாய் என்றேன்
உன் திருவாக்கை கேட்க
செவ்வாய் வாசியாக்கிவிட்டாய் என்னை !

புதனில் ஜீவிப்பதாக
எண்ணுகிறேன்
உன் சூரியப்புயல்
என்னை சுட்டெரிக்கின்றது

வியாழன் போல்
நீ விஸ்வரூபம்
எடுப்பாயென எண்ணியிருக்கவில்லை
சுவடுகள் பாதிக்காமலே
மூழ்கி போகிறேன் உன்னுள்

உன் மௌன பூகம்பம் கண்டு
ஊமை வார்த்தைகளுக்கு
உயிர்கொடு என்று
வெள்ளி கொலுசுகள் சிணுங்குகின்றன

சனியின் வலயங்களை
உன் வல கரங்களுக்கு
வளையலாக தொடுக்க நினைத்தேன்
நீயோ கைக்கொடுக்கவில்லை
கை நழுவியதாக
பதறுகிறது இதயம்

உன் பின்னே சுற்றி சுற்றியே
சுயம் இழந்தவன் நான்
புளுடோவை போல்
தள்ளி வைக்கின்றது
உன் ஞாயிற்று குடும்பம்

எழுதியவர் : umashangar (28-Dec-14, 12:07 pm)
பார்வை : 78

மேலே