கண்ணாடிபொழுதுகள்

திரள்கின்ற மேகங்கள்
திட்டிய வார்த்தையில்
நனைகின்ற பூவினம்
நற்றமிழ் பாடிடும்.......

புணர்கின்ற உயிர்இனங்கள்
பெறுகின்ற இன்பத்தில்
துணைபுரியும் நன்னிலம்
தாய்மை பெற்றிடும்....

அடையாத ஆசைகளை
ஜடை போட எண்ணுகையில்
அழைக்கின்ற வாசகம்
அழகாக தோன்றிடும்...

கண்ணாடி பொழுதாக
முகம் காட்டும் நாழிகை
கால்நடை பயணமாய்
வெகுதூரம் போய்விடும்...

ரசிக்காமல் அழகை
பசிக்காக புசித்திடும் கானகம்
ஏளனத்தின் காரணமாய்
அடி வானம் சிவந்திடும்...

பரந்த பூமியில்
பார்ப்பனவெல்லாம் பசுமையாய்
பழகியதன் தன்மையை
வெளிச்சம் போட்டு காட்டிடும்....

செவில் அறையும்
காற்றிடம் காயப்பட்டதில்
தலைகுனிந்த நாணல்
புயலிடம் அதிகாரப்போரிடும்.....

தொடர்வண்டி ஓட்டத்தில்
விரைந்தோடும் காட்சிகள்
தொலைதூரப் பார்வையில்
எறும்பைப் போல் ஊர்ந்திடும்.....

வணங்கிடும் தெய்வங்கள்
வாய்பேசிட நேர்ந்தால்
நிகழ்ந்திடும் ரசனையற்றதாய்
மானிடர் வாழ்வு.....

எழுதியவர் : அன்வர்தீன் (12-Jan-15, 3:54 am)
பார்வை : 73

மேலே