தை வரவால் பொங்கட்டும்

தைப்பொங்கல் பொங்கட்டும் !
---தரணிமிசை நலன்களுமே
வைகறையின் புதுமலராய்
----வாய்திறந்து சிரிக்கட்டும் !
தைப்பிறந்தால் வழிபிறக்கும்
---என்றந்த முன்னோர்கள்
கைகளினால் தீட்டியதும்
---கண்டிப்பாய்ப் பலிக்கட்டும் !

மார்கழியும் மண்விட்டு
---மெல்ல உறங்கிவிட
ஏர்முனையில் பயிர்செய்யும்
---ஏற்றமிகு உழவர்களைப்
பார்போற்றப் புகழ்செய்து
---பாக்களினால் பாராட்டி
சீர்மிகுந்த மரியாதை
---செய்திடுவோம் இந்நாளில் !

இன்றுண்ணும் செங்கரும்பைப்
---போலென்றும் தித்திப்பாய்
நன்றாய்நாம் இன்சொற்கள்
---மனமுவந்து பேசிடுவோம்
என்றும்நாம் கொடுஞ்சொற்கள்
---எப்போதும் தவிர்த்துவிட்டால்
அன்னையவள் பராசக்தி
---அருளதனைச் சாற்றிடுவாள் !

***********இனிய பொங்கல் வாழ்த்துக்கள்******************

எழுதியவர் : விவேக்பாரதி (15-Jan-15, 2:36 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 55

மேலே